பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கருடக் கொடியோன் காணமாட்டாக் கழல் சேவடி என்னும் பொருளைத் தந்து, இங்கு, என்னை ஆண்ட பொல்லா மணியே! ஓ! இருளைத் துரந்திட்டு, இங்கே வா என்று, அங்கே, கூவும் அருளைப் பெறுவான், ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
மொய்ப்பால் நரம்பு கயிறு ஆக, மூளை, என்பு, தோல், போர்த்த குப்பாயம் புக்கு, இருக்ககில்லேன்; கூவிக்கொள்ளாய்; கோவே! ஓ! எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே! ஓ! அப்பா! காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
சீ வார்ந்து, ஈ மொய்த்து, அழுக்கொடு திரியும் சிறு குடில் இது சிதையக் கூவாய்; கோவே! கூத்தா! காத்து ஆட்கொள்ளும் குரு மணியே! தேவா! தேவர்க்கு அரியானே! சிவனே! சிறிது என் முகம் நோக்கி, ஆ! ஆ! என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
மிடைந்து எலும்பு, ஊத்தை மிக்கு, அழுக்கு ஊறல், வீறு இலி, நடைக் கூடம் தொடர்ந்து எனை நலைய, துயர் உறுகின்றேன்; சோத்தம்! எம் பெருமானே! உடைந்து, நைந்து, உருகி, உள் ஒளி நோக்கி, உன் திரு மலர்ப் பாதம் அடைந்து நின்றிடுவான், ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
அளி புண் அகத்து, புறம் தோல் மூடி, அடியேன் உடை யாக்கை, புளியம்பழம் ஒத்து இருந்தேன்; இருந்தும், விடையாய்! பொடி ஆடீ! எளிவந்து, என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே! ஓ! அளியேன் என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
எய்த்தேன் நாயேன்; இனி இங்கு இருக்ககில்லேன்; இவ் வாழ்க்கை வைத்தாய்; வாங்காய்; வானோர் அறியா மலர்ச் சேவடியானே! முத்தா! உன் தன் முக ஒளி நோக்கி, முறுவல் நகை காண, அத்தா! சால ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
பாரோர், விண்ணோர், பரவி ஏத்தும் பரனே! பரஞ்சோதி! வாராய்; வாரா உலகம் தந்து, வந்து ஆட்கொள்வானே! பேர் ஆயிரமும் பரவித் திரிந்து, எம் பெருமான் என ஏத்த, ஆரா அமுதே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
கையால் தொழுது. உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு, எய்யாது என் தன் தலை மேல் வைத்து, எம் பெருமான்!, பெருமான்! என்று, ஐயா! என் தன் வாயால் அரற்றி, அழல் சேர் மெழுகு ஒப்ப, ஐயாற்று அரசே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
செடி ஆர் ஆக்கைத் திறம் அற வீசி, சிவபுர நகர் புக்கு, கடி ஆர் சோதி கண்டுகொண்டு, என் கண் இணை களி கூர, படி தான் இல்லாப் பரம்பரனே! உன் பழ அடியார் கூட்டம், அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
வெம், சேல் அனைய கண்ணார் தம் வெகுளி வலையில் அகப்பட்டு, நைஞ்சேன், நாயேன்; ஞானச் சுடரே! நான் ஓர் துணை காணேன்; பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா! பவளத் திருவாயால், அஞ்சேல் என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!