பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவாரூர்
வ.எண் பாடல்
1

சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்
பத்தி மலர் தூவ, முத்தி ஆகுமே.

2

பிறவி அறுப்பீர்காள்! அறவன் ஆரூரை
மறவாது ஏத்துமின்! துறவி ஆகுமே.

3

துன்பம் துடைப்பீர்காள்! அன்பன் அணி ஆரூர்
நன்பொன்மலர் தூவ, இன்பம் ஆகுமே.

4

உய்யல் உறுவீர்காள்! ஐயன் ஆரூரைக்
கையினால்-தொழ, நையும், வினைதானே.

5

பிண்டம் அறுப்பீர்காள்! அண்டன் ஆரூரைக்
கண்டு மலர் தூவ, விண்டு வினை போமே.

6

பாசம் அறுப்பீர்காள்! ஈசன் அணி ஆரூர்
வாசமலர் தூவ, நேசம் ஆகுமே.

7

வெய்ய வினை தீர, ஐயன் அணி ஆரூர்
செய்யமலர் தூவ, வையம் உமது ஆமே.

8

அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர்
கரத்தினால்-தொழ, திருத்தம் ஆகுமே.

9

துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளுமவர் தம்மேல் விள்ளும், வினைதானே.

10

கடுக் கொள் சீவரை அடக்கினான் ஆரூர்
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர், வேட்கையே.

11

சீர் ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன
பார் ஊர் பாடலார் பேரார், இன்பமே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவாரூர்
வ.எண் பாடல்
1

பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்; திங்கள்
சூடலன்; மூ இலையசூலம் வலன் ஏந்தி;
கூடலர் மூஎயிலும் எரியுண்ண, கூர் எரி கொண்டு, எல்லி
ஆடலன்; ஆதிரையன்-ஆரூர் அமர்ந்தானே.

2

சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல, சூழ்ந்த
ஆலையின் வெம்புகை போய் முகில் தோயும் ஆரூரில்,
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம்,
காலையும் மாலையும் போய், பணிதல் கருமமே.

3

உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்! மெய்யே
கள்ளம் ஒழிந்திடுமின்! கரவாது இரு பொழுதும்,
வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய,
அள்ளல் அகன் கழனி, ஆரூர் அடைவோமே.

4

வெந்து உறு வெண் மழுவாள் படையான், மணிமிடற்றான், அரையின்
ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான், அணி ஆரூர்ப்
பைந்தளிர்க் கொன்றை அம்தார்ப் பரமன் அடி பரவ, பாவம்
நைந்து அறும்; வந்து அணையும், நாள்தொறும் நல்லனவே.

5

வீடு பிறப்பு எளிது ஆம்; அதனை வினவுதிரேல், வெய்ய
காடு இடம் ஆக நின்று கனல் ஏந்திக் கை வீசி
ஆடும் அவிர்சடையான் அவன் மேய ஆரூரைச் சென்று
பாடுதல், கைதொழுதல், பணிதல், கருமமே.

6

கங்கை ஓர் வார்சடைமேல் கரந்தான், கிளிமழலைக் கேடு இல்
மங்கை ஓர் கூறு உடையான், மறையான், மழு ஏந்தும்
அம் கையினான், அடியே பரவி, அவன் மேய ஆரூர்
தம் கையினால்-தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

7

நீறு அணி மேனியனாய், நிரம்பா மதி சூடி, நீண்ட
ஆறு அணி வார்சடையான், ஆரூர் இனிது அமர்ந்தான்-
சேறு அணி மா மலர்மேல் பிரமன் சிரம் அரிந்த, செங்கண்
ஏறு அணி வெள் கொடியான் அவன்-எம்பெருமானே.

8

வல்லியந்தோல் உடையான், வளர் திங்கள் கண்ணியினான், வாய்த்த
நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான்,
அல்லி அம் கோதை தன்னை ஆகத்து அமர்ந்து அருளி, ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.

9

1. செந்துவர் ஆடையினார், உடை விட்டு நின்று உழல்வார், சொன்ன
இந்திரஞாலம் ஒழிந்து, இன்பு உற வேண்டுதிரேல்,
அந்தர மூ எயிலும் அரணம் எரியூட்டி, ஆரூர்த்
தம் திரமா உடையான் அவன்-எம் தலைமையனே.

10

நல்ல புனல் புகலித் தமிழ் ஞானசம்பந்தன், நல்ல
அல்லிமலர்க் கழனி ஆரூர் அமர்ந்தானை,
வல்லது ஓர் இச்சையினால், வழிபாடு இவைபத்தும் வாய்க்கச்
சொல்லுதல், கேட்டல், வல்லார் துன்பம் துடைப்பாரே.