பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ, இரவில் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி; அரவச் சடை அந்தணன்; மேய, அழகு ஆர் குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே.
விண்டார் புரம்மூன்றும் எரித்த விமலன், இண்டு ஆர் புறங்காட்டுஇடை நின்று எரி ஆடி, வண்டு ஆர் கருமென்குழல் மங்கை ஒர்பாகம் கொண்டான், நகர்போல் குரங்காடுதுறையே.
நிறைவு இல் புறங்காட்டுஇடை, நேரிழையோடும் இறைவு இல் எரியான், மழு ஏந்தி நின்று ஆடி; மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும் குறைவுஇல்லவன்; ஊர் குரங்காடுதுறையே.
விழிக்கும் நுதல்மேல் ஒரு வெண்பிறை சூடி, தெழிக்கும் புறங்காட்டுஇடைச் சேர்ந்து எரிஆடி, பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன், ஊர் பொன் கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே.
நீறு ஆர்தரு மேனியன், நெற்றி ஓர் கண்ணன், ஏறு ஆர் கொடி எம் இறை, ஈண்டு எரிஆடி, ஆறு ஆர் சடை அந்தணன், ஆயிழையாள் ஓர் கூறான், நகர்போல் குரங்காடுதுறையே.
நளிரும் மலர்க்கொன்றையும் நாறு கரந்தைத் துளிரும் சுலவி, சுடுகாட்டு எரிஆடி, மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில் குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே.
பழகும் வினை தீர்ப்பவன்; பார்ப்பதியோடும், முழவம் குழல் மொந்தை முழங்க, எரிஆடும் அழகன்; அயில்மூஇலைவேல் வலன் ஏந்தும் குழகன்; நகர்போல் குரங்காடுதுறையே.
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க, நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் கரை ஆர்ந்து இழி காவிரிக் கோலக் கரைமேல், குரை ஆர் பொழில் சூழ், குரங்காடுதுறையே.
நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணாப் படிஆகிய பண்டங்கன், நின்று எரிஆடி, செடி ஆர் தலை ஏந்திய செங்கண் வெள் ஏற்றின் கொடியான், நகர்போல் குரங்காடுதுறையே.
துவர் ஆடையர், வேடம் அலாச் சமண்கையர், கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம் நவை ஆர் மணி, பொன், அகில், சந்தனம், உந்திக் குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே.
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன், கொல் ஏறு உடையான் குரங்காடுதுறைமேல் சொல் ஆர் தமிழ்மாலைபத்தும், தொழுது ஏத்த வல்லார் அவர், வானவரோடு உறைவாரே.