பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஅகத்தியான் பள்ளி
வ.எண் பாடல்
1

வாடிய வெண்தலை மாலை சூடி, வயங்கு இருள
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக, நிவந்து எரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம், பாவமே.

2

துன்னம் கொண்ட உடையான், துதைந்த வெண் நீற்றினான்,
மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான், மா நகர்
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னம் செய்த மனத்தார்கள் தம் வினை ஓடுமே.

3

உடுத்ததுவும் புலித்தோல்; பலி, திரிந்து உண்பதும்;
கடுத்து வந்த கழல் காலன் தன்னையும், காலினால்
அடர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
தொடுத்ததுவும் சரம், முப்புரம் துகள் ஆகவே.

4

காய்ந்ததுவும் அன்று காமனை, நெற்றிக்கண்ணினால்;
பாய்ந்ததுவும் கழல் காலனை; பண்ணின், நால்மறை,
ஆய்ந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவும் இமவான் மகள் ஒரு பாகமே.

5

காய்ந்ததுவும் அன்று காமனை, நெற்றிக்கண்ணினால்;
பாய்ந்ததுவும் கழல் காலனை; பண்ணின், நால்மறை,
ஆய்ந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவும் இமவான் மகள் ஒரு பாகமே.

6

தெரிந்ததுவும், கணை ஒன்று; முப்புரம், சென்று உடன்
எரிந்ததுவும்; முன் எழில் ஆர் மலர் உறைவான் தலை,
அரிந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
புரிந்ததுவும்(ம்) உமையாள் ஓர்பாகம் புனைதலே.

7

ஓதி, எல்லாம்! உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி! மெய்ச்
சோதி! என்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும்
ஆதி, எங்கள் பெருமான், அகத்தியான் பள்ளியை
நீதியால் தொழுவார் அவர் வினை நீங்குமே.

8

செறுத்ததுவும் தக்கன் வேள்வியை; திருந்தார் புரம்,
ஒறுத்ததுவும்; ஒளி மா மலர் உறைவான் சிரம்,
அறுத்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன் தன் தோள்கள் இருபதே.

9

சிரமும், நல்ல மதமத்தமும், திகழ் கொன்றையும்,
அரவும், மல்கும் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை
பரவ வல்லார் அவர் தங்கள் மேல் வினை பாறுமே.

10

செந்துவர் ஆடையினாரும், வெற்று அரையே திரி
புந்தி இலார்களும், பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி;
அந்தணன், எங்கள் பிரான், அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின்! நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே.

11

ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன், மா மயில்
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான் பள்
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய
மாலை வல்லார் அவர் தங்கள் மேல் வினை மாயுமே.