பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவானைக்கா
வ.எண் பாடல்
1

மழை ஆர் மிடறா! மழுவாள் உடையாய்!
உழை ஆர் கரவா! உமையாள்கணவா!
விழவு ஆரும் வெண்நாவலின் மேவிய எம்
அழகா! எனும் ஆயிழையாள் அவளே

2

கொலை ஆர் கரியின்(ன்) உரி மூடியனே!
மலை ஆர் சிலையா வளைவித்தவனே!
விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்!
நிலையா அருளாய்! எனும் நேரிழையே.

3

காலால் உயிர் காலனை வீடுசெய்தாய்!
பாலோடு நெய் ஆடிய பால்வணனே!
வேல் ஆடு கையாய்! எம் வெண்நாவல் உளாய்!
ஆல் ஆர் நிழலாய்! எனும் ஆயிழையே.

4

சுறவக் கொடி கொண்டவன் நீறு அது ஆய்
உற, நெற்றி விழித்த எம் உத்தமனே!
விறல் மிக்க கரிக்கு அருள்செய்தவனே!
அறம் மிக்கது எனும் ஆயிழையே.

5

செங்கண் பெயர் கொண்டவன் செம்பியர்கோன்
அம் கண் கருணை பெரிது ஆயவனே!
வெங் கண் விடையாய்! எம் வெண்நாவல் உளாய்!
அங்கத்து அயர்வு ஆயினள், ஆயிழையே.

6

குன்றே அமர்வாய்! கொலை ஆர் புலியின்
தன் தோல் உடையாய்! சடையாய்! பிறையாய்!
வென்றாய், புரம்மூன்றை! வெண்நாவலுளே
நின்றாய், அருளாய்! எனும் நேரிழையே.

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை

8

மலை அன்று எடுத்த அரக்கன் முடிதோள
தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா!
விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்!
அலசாமல் நல்காய்! எனும் ஆயிழையே.

9

திரு ஆர்தரு, நாரணன், நான்முகனும்,
அருவா, வெருவா, அழல் ஆய் நிமிர்ந்தாய்!
விரை ஆரும் வெண்நாவலுள் மேவிய எம்
அரவா! எனும் ஆயிழையாள் அவளே.

10

புத்தர்பலரோடு அமண்பொய்த்தவர்கள்
ஒத்த உரை சொலிவை ஓரகிலார்;
மெய்த் தேவர் வணங்கும் வெண்நாவல் உளாய்!
அத்தா! அருளாய்! எனும் ஆயிழையே.

11

வெண்நாவல் அமர்ந்து உறை வேதியனை,
கண் ஆர் கமழ் காழியர்தம் தலைவன்,
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார்
விண்ணோர் அவர் ஏத்த விரும்புவரே.