பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி சடைமேல் வரி அரவம் கண்டு இரைக்கும் பிறைச் சென்னிக் காபாலி கனை கழல்கள் தொண்டு இரைத்துத் தொழுது இறைஞ்ச, துளங்கு ஒளி நீர்ச் சுடர்ப் பவளம் தெண்திரை(க்)கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக் குடியாரே.
பாய் திமிலர் வலையோடு மீன் வாரிப் பயின்று எங்கும் காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழிக் கானல் போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து, அழகு ஆர் தீ-எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே.
தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால் பாத்திரமா ஆட்டுதலும், பரஞ்சோதி பரிந்து அருளி “ஆத்தம்” என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த, தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே.
கலவம் சேர் கழிக் கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும் அலவன் சேர் அணை வாரிக் கொணர்ந்து எறியும் அகன் துறைவாய் நிலவு அம் சேர் நுண் இடைய நேரிழையாள் அவளோடும் திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டக்குடியாரே.
பங்கம் ஆர் கடல் அலற, பருவரையோடு அரவு உழல, செங்கண் மால் கடைய, எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி; அங்கம் நால்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த திங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே.
நாவாய பிறைச் சென்னி, நலம் திகழும் இலங்கு இப்பி, கோவாத நித்திலங்கள், கொணர்ந்து எறியும் குளிர்கானல் ஏ ஆரும் வெஞ்சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த தேவாதி தேவனார் திரு வேட்டக்குடியாரே.
பால் நிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்கு கான் நிலவு மலர்ப் பொய்கைக் கைதல் சூழ் கழிக் கானல் மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார் தேன் நிலவு மலர்ச்சோலைத் திரு வேட்டக்குடியாரே.
துறை உலவு கடல் ஓதம் சுரிசங்கம் இடறிப் போய், நறை உலவும் பொழில் புன்னை நன்நீழல் கீழ் அமரும் இறை பயிலும் இராவணன் தன் தலை பத்தும் இருபது தோள திறல் அழிய அடர்த்தாரும் திரு வேட்டக்குடியாரே.
அருமறை நான் முகத்தானும், அகலிடம் நீர் ஏற்றானும், இருவரும் ஆய் அளப்பு அரிய எரி உரு ஆய் நீண்ட பிரான்; வருபுனலின் மணி உந்தி மறிதிரை ஆர் சுடர்ப் பவளத்- திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே.
இகழ்ந்து உரைக்கும் சமணர்களும், இடும் போர்வைச் சாக்கியரும், புகழ்ந்து உரையாப் பாவிகள் சொல் கொள்ளேன்மின், பொருள் என்ன! நிகழ்ந்து இலங்கு வெண்மணலின் நிறைத் துண்டப் பிறைக்கற்றை திகழ்ந்து இலங்கு செஞ்சடையார் திரு வேட்டக்குடியாரே.
தெண்திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை, தண்டலை சூழ் கலிக் காழித் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார், போய், உண்டு உடுப்பு இல் வானவரோடு, உயர்வானத்து இருப்பாரே.