பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
“தோடு உலாம் மலர்கள் தூவித் தொழுது எழு மார்க்கண்டேயன் வீடும் நாள் அணுகிற்று” என்று மெய் கொள்வான் வந்த காலன் பாடு தான் செலலும், அஞ்சி, “பாதமே சரணம்” என்ன, சாடினார், காலன் மாள; சாய்க்காடு மேவினாரே.
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல்-தேவர் அஞ்சி அடைந்து, “நும் சரணம்” என்ன, அருள் பெரிது உடையர் ஆகித் தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே.
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன் வரணியல் ஆகித் தன் வாய் நூலினால் பந்தர் செய்ய, முரண் இலாச் சிலந்தி தன்னை முடி உடை மன்னன் ஆக்கித் தரணி தான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே.
அரும் பெருஞ் சிலைக் கை வேடனாய், விறல் பார்த்தற்கு, அன்று(வ்) உரம் பெரிது உடைமை காட்டி, ஒள் அமர் செய்து, மீண்டே வரம் பெரிது உடையன் ஆக்கி, வாள் அமர் முகத்தில் மன்னும் சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.
இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களே மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த, தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று, சந்திரற்கு அருள் செய்தாரும் சாய்க்காடு மேவினாரே.
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து பூ மலி கொன்றை சூட்டப் பொறாத தன் தாதை தாளைக் கூர் மழு ஒன்றால் ஓச்ச, குளிர் சடைக் கொன்றை மாலைத்- தாமம் நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட, ஐயம் இல் அமரர் ஏத்த, ஆயிரம் முகம் அது ஆகி வையகம் நெளியப் பாய்வான் வந்து இழி கங்கை என்னும் தையலைச் சடையில் ஏற்றார்-சாய்க்காடு மேவினாரே.
குவப் பெருந் தடக்கை வேடன், கொடுஞ்சிலை இறைச்சிப்பாரம், துவர்ப் பெருஞ் செருப்பால் நீக்கி, தூய வாய்க் கலசம் ஆட்ட, உவப் பெருங் குருதி சோர, ஒரு க(ண்)ண்ணை இடந்து அங்கு அப்பத் தவப் பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே.
நக்கு உலாம் மலர் பல்-நூறு கொண்டு நல் ஞானத்தோடு மிக்க பூசனைகள் செய்வான், மென்மலர் ஒன்று காணாது, “ஒக்கும், என் மலர்க்கண்” என்று அங்கு ஒரு க(ண்)ண்ணை இடந்தும் அப்ப, சக்கரம் கொடுப்பர் போலும்-சாய்க்காடு மேவினாரே.
புயம் கம் ஐஞ்-ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடிச் சிவன் திருமலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்ச, வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி, மீண்டே சயம் பெற நாமம் ஈந்தார்-சாய்க்காடு மேவினாரே.