பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருத்தென்குரங்காடுதுறை
வ.எண் பாடல்
1

இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்-
புரம் காவல்(ல்) அழியப் பொடி ஆக்கினான்
தரங்கு ஆடும் தட நீர்ப் பொன்னித் தென்கரைக்
குரங்காடூதுறைக் கோலக் கபாலியே.

2

முத்தினை(ம்), மணியை, பவளத்து ஒளிர்-
தொத்தினை, சுடர்சோதியை, சோலை சூழ்
கொத்து அலர் குரங்காடுதுறை உறை
அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே.

3

குளிர்புனல் குரங்காடுதுறையனை
தளிர்நிறத் தையல் பங்கனை, தண்மதி
ஒளியனை(ந்), நினைந்தேனுக்கு என் உள்ளமும்
தெளிவினைத் தெளியத் தெளிந்திட்டதே.

4

மணவன் காண்; மலையாள் நெடு மங்கலக்
கணவன் காண்; கலை ஞானிகள் காதல் எண்-
குணவன் காண்; குரங்காடுதுறைதனில்
அணவன் காண், அன்புசெய்யும் அடியர்க்கே.

5

ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன்;
காலத்தான் உயிர் போக்கிய காலினன்;
நீலத்து ஆர் மிடற்றான்; வெள்ளை நீறு அணி
கோலத்தான் குரங்காடுதுறையனே.

6

ஆட்டினான், முன் அமணரோடு என்தனை;
பாட்டினான், தன பொன் அடிக்கு இன் இசை;
வீட்டினான், வினை; மெய் அடியாரொடும்
கூட்டினான் குரங்காடுதுறையனே.

7

மாத்தன்தான், மறையார் முறையால்; மறை-
ஓத்தன்; தாருகன் தன் உயிர் உண்ட பெண்
போத்தன்தான்; அவள் பொங்கு சினம் தணி
கூத்தன்தான் குரங்காடுதுறையனே.

8

நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்!
ஆடுமின்(ன்)! அழுமின்! தொழுமின்(ன்)! அடி
பாடுமின்! பரமன் பயிலும்(ம்) இடம்,
கூடுமின், குரங்காடுதுறையையே!

9

தென்றல் நன்நெடுந்தேர் உடையான் உடல்
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்;
அன்று அவ் அந்தகனை அயில்சூலத்தால்
கொன்றவன் குரங்காடுதுறையனே.

10

நல்-தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம்
உற்ற நல்மொழியால் அருள்செய்த நல்
கொற்றவன் குரங்காடுதுறை தொழ,
பற்றும் தீவினை ஆயின பாறுமே.

11

கடுத்த தேர் அரக்கன் கயிலை(ம்) மலை
எடுத்த தோள்தலை இற்று அலற(வ்) விரல்
அடுத்தலும்(ம்), அவன் இன் இசை கேட்டு அருள்
கொடுத்தவன் குரங்காடுதுறையனே.