பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமயிலாடுதுறை
வ.எண் பாடல்
1

கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை
உள்ளம் உள்கி உரைக்கும், திருப்பெயர்
வள்ளல் மா மயிலாடுதுறை உறை
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே.

2

சித்தம் தேறும்; செறிவளை சிக்கெனும்;
பச்சை தீரும், என் பைங்கொடி-பால்மதி
வைத்த மா மயிலாடுதுறை அரன்
கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே.

3

அண்டர் வாழ்வும், அமரர் இருக்கையும்,
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம்
வண்டு சேர் மயிலாடுதுறை அரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.

4

வெஞ்சினக் கடுங் காலன் விரைகிலான்;
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம்-
மஞ்சன், மா மயிலாடுதுறை உறை
அஞ்சலாள் உமைபங்கன், அருளிலே.

5

குறைவு இலோம், கொடு மானுட வாழ்க்கையால்-
கறை நிலாவிய கண்டன், எண் தோளினன்,
மறைவலான், மயிலாடுதுறை உறை
இறைவன், நீள் கழல் ஏத்தி இருக்கிலே.

6

நிலைமை சொல்லு, நெஞ்சே! தவம் என் செய்தாய்?
கலைகள் ஆய வல்லான், கயிலாயநல்
மலையன், மா மயிலாடுதுறையன், நம்
தலையின்மேலும் மனத்துளும் தங்கவே.

7

நீற்றினான், நிமிர்புன்சடையான், விடை-
ஏற்றினான், நமை ஆள் உடையான், புலன்
மாற்றினான், மயிலாடுதுறை என்று
போற்றுவார்க்கும் உண்டோ, புவி வாழ்க்கையே.?

8

கோலும், புல்லும், ஒரு கையில் கூர்ச்சமும்,
தோலும், பூண்டு துயரம் உற்று என் பயன்?
நீல மா மயில் ஆடு துறையனே!
நூலும் வேண்டுமோ, நுண் உணர்ந்தோர்கட்கே?

9

பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி
மணம் கொளச் சடை வைத்த மறையவன்,
வணங்கும் மா மயிலாடுதுறை அரன்,
அணங்கு ஓர்பால் கொண்ட கோலம் அழகிதே!

10

நீள் நிலா அரவச் சடை நேசனைப்
பேணிலாதவர் பேதுறவு ஓட்டினோம்;
வாள்நிலா மயிலாடுதுறைதனைக்
காணில், ஆர்க்கும் கடுந் துயர் இல்லையே.

11

பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தினான், அவன் இன் இசை கேட்டலும்
வரத்தினான், மயிலாடுதுறை தொழும்
கரத்தினார் வினைக்கட்டு அறும்; காண்மினே!