பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருநெய்த்தானம்
வ.எண் பாடல்
1

கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
புல்லியார் புரம்மூன்றும் எரிசெய்தவன்,
நெல்லியான், நிலை ஆன நெய்த்தானனைச்
சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே.

2

இரவனை, இடு வெண்தலை ஏந்தியை,
பரவனை, படையார் மதில் மூன்றையும்
நிரவனை, நிலைஆன நெய்த்தானனை,
குரவனை, தொழுவார் கொடிவாணரே.

3

ஆன் இடைஐந்தும் ஆடுவர்; ஆர் இருள்
கான் இடை நடம் ஆடுவர்; காண்மினோ!
தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை
வான் இடைத் தொழுவார் வலிவாணரே.

4

விண்டவர் புரம்மூன்றும் வெண் நீறு எழக்
கண்டவன், கடிது ஆகிய நஞ்சினை
உண்டவன்(ன்), ஒளி ஆன நெய்த்தானனைத்
தொண்டராய்த் தொழுவார் சுடர்வாணரே.

5

முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான்,
நங்கையோடு நவின்ற நெய்த்தானனைத்
தம் கையால்-தொழுவார் தலைவாணரே.

6

சுட்ட நீறு மெய் பூசி, சுடலையுள்
நட்டம் ஆடுவர், நள் இருள் பேயொடே;
சிட்டர், வானவர், தேரும் நெய்த்தானனை
இட்டம் ஆய்த் தொழுவார் இன்பவாணரே.

7

கொள்ளித் தீ-எரி வீசிக் கொடியது ஓர்
கள்ளிக் காட்டு இடை ஆடுவர்; காண்மினோ!
தெள்ளித் தேறித் தெளிந்து நெய்த்தானனை
உள்ளத்தால்-தொழுவார் உம்பர்வாணரே.

8

உச்சிமேல் விளங்கும்(ம்) இளவெண்பிறை
பற்றி ஆடு அரவோடும் சடைப் பெய்தான்,
நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனைச்
சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே.

9

மாலொடும், மறை ஓதிய நான்முகன்,
காலொடும் முடி காண்பு அரிது ஆயினான்;
சேலொடும் செருச் செய்யும் நெய்த்தானனை
மாலொடும் தொழுவார் வினை வாடுமே.

10

வலிந்த தோள் வலி வாள் அரக்கன்தனை
நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார்
புரிந்து கைந்நரம்போடு இசை பாடலும்
பரிந்தனை, பணிவார் வினை பாறுமே.