பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமழபாடி
வ.எண் பாடல்
1

நீறு ஏறு திருமேனி உடையான் கண்டாய்; நெற்றிமேல்
ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்;
கூறுஆக உமை பாகம் கொண்டான் கண்டாய்;
கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்;
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய்; ஏழ் உலகும்
ஏழ்மலையும் ஆனான் கண்டாய்;
மாறு ஆனார் தம் அரணம் அட்டான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன்தானே.

2

கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய்;
கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய்;
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய்;
அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய்;
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய்;
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்;
மற்று இருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி
மன்னும் மணாளன் தானே.

3

நெற்றித் தனிக் கண் உடையான் கண்டாய்; நேரிழை
ஓர் பாகம் ஆய் நின்றான் கண்டாய்;
பற்றிப் பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய்; பல் ஊர்
பலி தேர் பரமன் கண்டாய்;
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய்; செழு
மா மதி சென்னி வைத்தான் கண்டாய்;
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி
மன்னும் மணாளன் தானே.

4

அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்;
அண்டத்துக்கு அப்பால் ஆய் நின்றான் கண்டாய்;
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய்; கொல்
வேங்கைத் தோல் ஒன்று உடுத்தான் கண்டாய்;
சிலையால்-திரிபுரங்கள் செற்றான் கண்டாய்; செழு
மா மதி சென்னி வைத்தான் கண்டாய்;
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி
மன்னும் மணாளன் தானே.

5

உலந்தார் தம் அங்கம் அணிந்தான் கண்டாய்;
உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய்;
நலம் திகழும் கொன்றைச் சடையான் கண்டாய்;
நால்வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்;
உலந்தார் தலை கலனாக் கொண்டான் கண்டாய்;
உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த
மழபாடி மன்னும் மணாளன் தானே.

6

தாமரையான் தன் தலையைச் சாய்த்தான் கண்டாய்;
தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டாய்;
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்! புணர்ச்சிப்
பொருள் ஆகி நின்றான் கண்டாய்;
ஏ மருவு வெஞ்சிலை ஒன்று ஏந்தி கண்டாய்; இருள்
ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய்;
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி
மன்னும் மணாளன் தானே.

7

நீர் ஆகி, நெடுவரைகள் ஆனான் கண்டாய்; நிழல்
ஆகி, நீள் விசும்பும் ஆனான் கண்டாய்;
பார் ஆகி, பௌவம் ஏழ் ஆனான் கண்டாய்; பகல்
ஆகி, வான் ஆகி, நின்றான் கண்டாய்;
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய்;
அணு ஆகி, ஆதி ஆய், நின்றான் கண்டாய்;
வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் தானே.

8

பொன் இயலும் திருமேனி உடையான் கண்டாய்;
பூங்கொன்றைத்தார் ஒன்று அணிந்தான் கண்டாய்;
மின் இயலும் வார்சடை எம்பெருமான் கண்டாய்;
வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான் கண்டாய்;
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய்;
தாங்க (அ)ரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய்;
மன்னிய மங்கை ஓர் கூறன் கண்டாய் மழபாடி
மன்னும் மணாளன் தானே.

9

ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய்; அடையலர்
தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய்;
காலால் அக் காலனையும் காய்ந்தான் கண்டாய்;
கண்ணப்பர்க்கு அருள் செய்த காளை கண்டாய்;
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய்; பசு
ஏறிப் பலி திரியும் பண்பன் கண்டாய்;
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி
மன்னும் மணாளன் தானே.

10

ஒரு சுடர் ஆய், உலகு ஏழும் ஆனான் கண்டாய்;
ஓங்காரத்து உள் பொருள் ஆய் நின்றான் கண்டாய்;
விரி சுடர் ஆய், விளங்கு ஒளி ஆய், நின்றான் கண்டாய்;
விழவு ஒலியும், வேள்வொலியும், ஆனான் கண்டாய்;
இரு சுடர் மீது ஓடா இலங்கைக்கோனை ஈடு அழிய
இருபது தோள் இறுத்தான் கண்டாய்;
மரு சுடரின் மாணிக்கக் குன்று கண்டாய் மழபாடி
மன்னும் மணாளன் தானே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமழபாடி
வ.எண் பாடல்
1

அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு அமுதா உண்டு,
அமரர்கள் தம் தலை காத்த ஐயர்; செம்பொன்
சிலை எடுத்து மா நாகம் நெருப்புக் கோத்துத்
திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும்;
“நிலை அடுத்த பசும் பொன்னால், முத்தால், நீண்ட
நிரை வயிரப் பலகையால், குவையாத் துற்ற
மலை அடுத்த மழபாடி வயிரத்தூணே!” என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே.

2

அறை கலந்த குழல், மொந்தை, வீணை, யாழும்,
அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த,
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார்
வான் ஆளக் கொடுத்தி அன்றே!
“கறை கலந்த பொழில் கச்சிக் கம்பம் மேய கன
வயிரத் திரள் தூணே! கலி சூழ் மாடம்
மறை கலந்த மழபாடி வயிரத்தூணே!” என்று என்றே
நான் அரற்றி நைகின்றேனே.

3

உரம் கொடுக்கும் இருள் மெய்யர், மூர்க்கர், பொல்லா
ஊத்தைவாய்ச் சமணர் தமை உறவாக் கொண்ட
பரம் கெடுத்து, இங்கு அடியேனை ஆண்டு கொண்ட
பவளத்தின் திரள் தூணே! பசும்பொன் முத்தே!
“புரம் கெடுத்து, பொல்லாத காமன் ஆகம் பொடி
ஆக விழித்து அருளி, புவியோர்க்கு என்றும்
வரம் கொடுக்கும் மழபாடி வயிரத்தூணே!” என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே.

4

“ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர், பொல்லா
ஊத்தைவாய்ச் சமணர் உறவு ஆகக் கொண்டு
ஞான(அ)கம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா
நாயேனைப் பொருள் ஆக ஆண்டு கொண்ட,
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும்
வேந்தனே! விண்ணவர் தம் பெருமான்! மேக
வானகம் சேர் மழபாடி வயிரத்தூணே!” என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே.

5

சிரம் ஏற்ற நான்முகன் தன் தலையும் மற்றைத்
திருமால் தன் செழுந் தலையும் பொன்றச் சிந்தி,
உரம் ஏற்ற இரவி பல்-தகர்த்து, சோமன்
ஒளிர்கலைகள் பட உழக்கி, உயிரை நல்கி,
நரை ஏற்ற விடை ஏறி, நாகம் பூண்ட நம்பியையே,
“மறை நான்கும் ஓலம் இட்டு
வரம் ஏற்கும் மழபாடி வயிரத்தூணே!” என்று என்றே
நான் அரற்றி நைகின்றேனே.

6

சினம் திருத்தும் சிறுப் பெரியார் குண்டர் தங்கள்
செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன்; தேடிப்
புனம் திருத்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறி
இலியேன் தனைப் பொருளா ஆண்டு கொண்டு,
தனம் திருத்துமவர் திறத்தை ஒழியப் பாற்றி, தயா
மூலதன் மவழி எனக்கு நல்கி,
மனம் திருத்தும் மழபாடி வயிரத்தூணே!” என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே.

7

“சுழித் துணை ஆம் பிறவி வழித் துக்கம் நீக்கும்
சுருள் சடை எம்பெருமானே! தூய தெண்நீர்
இழிப்ப(அ)ரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என்
துணையே! என்னுடைய பெம்மான்! தம்மான்!
பழிப்ப(அ)ரிய திருமாலும் அயனும் காணாப் பருதியே!
சுருதி முடிக்கு அணி ஆய் வாய்த்த,
வழித்துணை ஆம், மழபாடி வயிரத்தூணே!” என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே.