பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர் நால்மறைக்கு இடம் ஆய வேள்வியுள் செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை, உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும்(ம்) உடனே உறைவு இடம் அம் பொன் வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!
“விடம் கொள் மா மிடற்றீர்! வெள்ளைச் சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர்!” என்று திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும் திரு மிழலை, மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் அடங்கல் வீழி கொண்டீர்-அடியேற்கும் அருளுதிரே!
ஊனை உற்று உயிர் ஆயினீர்; ஒளி மூன்றும் ஆய், தெளி நீரொடு ஆன் அஞ்சின் தேனை ஆட்டு உகந்தீர்! செழு மாடத் திரு மிழலை, மானை மேவிய கையினீர்! மழு ஏந்தினீர்! மங்கை பாகத்தீர்! விண்ணில் ஆன வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!
“பந்தம், வீடு, இவை பண்ணினீர்; படிறீர்; மதிப்பிதிர்க் கண்ணியீர்” என்று சிந்தை செய்து இருக்கும் செங்கையாளர் திரு மிழலை, வந்து நாடகம் வான நாடியர் ஆட, மால் அயன் ஏத்த, நாள்தொறும் அம் தண் வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!
புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில் ஏந்தி; வேதப்புரவித் தேர்மிசைத் திரிசெய்-நால்மறையோர் சிறந்து ஏத்தும் திரு மிழலை, பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆடப் பரிந்து நல்கினீர்!- அரிய வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!
எறிந்த சண்டி, இடந்த கண்ணப்பன், ஏத்து பத்தர் கட்கு ஏற்றம் நல்கினீர்! செறிந்த பூம்பொழில்-தேன் துளி வீசும் திரு மிழலை, நிறைந்த அந்தணர் நித்தம்-நாள்தொறும் நேசத்தால் உமைப் பூசிக்கும்(ம்) இடம் அறிந்து, வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!
பணிந்த பார்த்தன், பகீரதன், பல பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்! திணிந்த மாடம்தொறும் செல்வம் மல்கு திரு மிழலை, தணிந்த அந்தணர் சந்தி நாள்தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை அணிந்து, வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!
பரந்த பாரிடம் ஊர் இடைப் பலி பற்றிப் பாத்து உணும் சுற்றம் ஆயினீர்; தெரிந்த நால்மறையோர்க்கு இடம் ஆய திரு மிழலை இருந்து, நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்; அருந் தண் வீழி கொண்டீர்!;-அடியேற்கும் அருளுதிரே!
“தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக!” என்று உமை கேட்க, சொல்லினீர்; “தீயர், ஆக்கு உலையாளர், செழு மாடத் திரு மிழலை மேய நீர் பலி ஏற்றது என்?” என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் ஆய வீழி கொண்டீர்;-அடியேற்கும் அருளுதிரே!
“வேத வேதியர், வேட நீதியர் ஓதுவார், விரி நீர் மிழலையுள் ஆதி வீழி கொண்டீர்; அடியேற்கும் அருளுக!” என்று நாதகீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன்தொண்டன்நல்-தமிழ் பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே.