பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருக்கோடிக் குழகர்
வ.எண் பாடல்
1

கடிது ஆய்க் கடல் காற்று வந்து எற்ற, கரைமேல்
குடி தான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ?
கொடியேன் கண்கள் கண்டன, கோடிக் குழகீர்!
அடிகேள்! உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே?

2

முன் தான் கடல் நஞ்சம் உண்ட அதனாலோ?
பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ?
குன்றாப் பொழில் சூழ் தரு கோடிக் குழகா!
என் தான் தனியே இருந்தாய்? எம்பிரானே!

3

மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால்
பத்தர் பலர் பாட இருந்த பரமா!
கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக் குழகா!
எத்தால்-தனியே இருந்தாய்? எம்பிரானே!

4

காடேல், மிக வலிது; காரிகை அஞ்ச,
கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற,
வேடித் தொண்டர் சாலவும் தீயர்; சழக்கர்;
கோடிக் குழகா! இடம் கோயில் கொண்டாயே?

5

மை ஆர் தடங்கண்ணி பங்கா! கங்கையாளும்
மெய் ஆகத்து இருந்தனள்; வேறு இடம் இல்லை;
கை ஆர் வளைக் காடு காளோடும் உடன் ஆய்க்
கொய் ஆர் பொழில் கோடியே கோயில் கொண்டாயே?

6

அரவு ஏர் அல்குலாளை ஓர் பாகம் அமர்ந்து,
மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்பால்
குரவம் பொழில் சூழ்தரு கோடிக் குழகா!
இரவே துணை ஆய் இருந்தாய்; எம்பிரானே!

7

பறையும் குழலும்(ம்) ஒலிபாடல் இயம்ப,
அறையும் கழல் ஆர்க்க, நின்று ஆடும் அமுதே!
குறையாப் பொழில் சூழ்தரு கோடிக் குழகா!
இறைவா! தனியே இருந்தாய்; எம்பிரானே!

8

ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அது தானோ?
அற்றப் பட ஆரூர் அது என்று அகன்றாயோ?
முற்றா மதி சூடிய கோடிக் குழகா!
எற்றால்-தனியே இருந்தாய்? எம்பிரானே!

9

நெடியானொடு நான்முகனும்(ம்) அறிவு ஒண்ணாப்
படியான்! பலி கொள்ளும் இடம் குடி இல்லை;
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரைமேல்;
அடிகேள்! அன்பு அது ஆய் இடம் கோயில் கொண்டாயே!

10

பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால்
ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார்
சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர் தாமே.