பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / முப்பதம்
வ.எண் பாடல்
1

தோன்றியது தொம் பதம் தற் பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம் மூன்றோடு எய்தினோன்
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பு அற
ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே.

2

போதம் தனை உன்னிப் பூதாதி பேதமும்
ஓதும் கருவி தொண்ணூறு உடன் ஓர் ஆறு
பேதமும் நாத அந்தப் பெற்றியில் கைவிட்டு
வேதம் சொல் தொம் பதம் ஆகும் தன் மெய்மையே.

3

தற்பதம் என்றும் தொம்பதம் தான் என்றும்
நிற்ப தசியத்துள் நேர் இழையாள் பதம்
சொல் பதத்தாலும் தொடர ஒண்ணாச் சிவன்
கற்பனை இன்றிக் கலந்து நின்றானே.

4

அணுவும் பரமும் அசி பதத் தேய்ந்து
கணு ஒன்று இலாத சிவமும் கலந்தால்
இணை அறு பால் தேன் அமுது என இன்பத்
துணை அது வாய் உரை அற்றிடத் தோன்றுமே.

5

தொம் பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன் சிவனாய் நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம் பொருள் ஆண்டு அருள் சீர் நந்தி தானே.

6

ஐம்பது அறியா தவரும் அவர் சிலர்
உம்பனை நாடி உரை முப் பதத்து இடைச்
செம்பரம் ஆகிய வாசி செலுத்திடத்
தம் பர யோகமாய்த் தானவன் ஆகுமே.

7

நந்தி அறிவும் நழுவில் அதீதம் ஆம்
இந்தியம் சத்து ஆதி விட வியன் ஆகும்
நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும்
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே.

8

பர துரியத்து நனவு படி உண்ட
விரிவில் கனவும் இதன் உப சாந்தத்து
உரிய சுழுனையும் ஓவும் சிவன் பால்
அரிய துரியம் அசி பதம் ஆமே.