பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நம்பியாண்டார் நம்பிகள் / திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை வெண்பா
வ.எண் பாடல்
1

என்னை நினைந்தடிமை கொண்டேன் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான்- புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.

2

முகத்தாற் கரியனென் றாலும் தனையே முயன்றவர்க்கு
மிகத்தான் வெளியனென் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார்
அகத்தான் திகழ்தரு நாரையூர் அம்மான் பயந்தவெம்மான்
உகத்தா னவன்தன் னுடலம் பிளந்த ஒருகொம்பனே.

3

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய்
பின்னவலம் செய்வதென்னோ பேசு.

4

பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியுமென்(று)
ஏசத் தகும்படி ஏறுவ தேயிமை யாதமுக்கட்
கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயுமிந்தத்
தேசத் தவர்தொழும் நாரைப் பதியுட் சிவக்களிறே.

5

. களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
பின்நாரை ஊர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்.

6

மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும்
சுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுட் கரன்மகற்கு
முகத்தது கையந்தக் கையது மூக்கந்த மூக்கதனின்
அகத்தது வாய்அந்த வாயது போலும் அடுமருப்பே.

7

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்தவெண்ணு கின்றவெறும் பன்றே அவரை
வருந்தவெண்ணு கின்ற மலம்.

8

மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற்
சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி றேயுன்னை வாழ்த்துவனே.

9

வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்
தனஞ்சாய லைத்தருவா னன்றோ - இனஞ்சாயத்
தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர்மக னாம்.

10

நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத்
தேரண வும்திரு நாரையூர் மன்னு சிவன்மகனே
காரண னேயெம் கணபதி யேநற் கரிவதனா
ஆரண நுண்பொரு ளேயென் பவர்க்கில்லை அல்லல்களே.

11

அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்
எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை
செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய்
கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.

12

கோவிற் கொடிய நமன்தமர் கூடா வகைவிடுவன்
காவில் திகழ்தரு நாரைப் பதியிற் கரும்பனைக்கை
மேவற் கரிய இருமதத் தொற்றை மருப்பின்முக்கண்
ஏவிற் புருவத் திமையவள் தான்பெற்ற யானையையே.

13

யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை
தானேச னாய்த்தனக்கு நல்கினான் - தேனே
தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலனேந்தி
எடுத்து மதமுகத்த ஏறு.

14

ஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக் கும்மிருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னிணை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத்தி னுக்கிளை யானைவிண்ணோர்
வேறியல் பால்தொழும் நாரைப் பதியுள் விநாயகனே.

15

கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்
மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு
கூசாரம் பூண்டமுகக் குஞ்சரங்கன் றென்றார்க்கு
மாசார மோசொல்லு வான்.

16

வானிற் பிறந்த மதிதவ ழும்பொழில் மாட்டளிசூழ்
தேனிற் பிறந்த மலர்த்திரு நாரைப் பதிதிகழும்
கோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின்
மானிற் பிறந்த களிறென் றுரைப்பரிவ் வையகத்தே.

17

வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனிநம் சிந்தையமர் வான்.

18

அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதியமர்ந்த
குமரா குமரற்கு முன்னவ னேகொடித் தேரவுணர்
தமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றின னேயெனநின்(று)
அமரா மனத்தவர் ஆழ்நர கத்தில் அழுந்துவரே.

19

அவமதியா துள்ளமே அல்லலற நல்ல
தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம்
கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர்
நம்பன் சிறுவன்சீர் நாம்.

20

நாந்தன மாமனம் ஏத்துகண் டாயென்றும் நாண்மலரால்
தாந்தன மாக இருந்தனன் நாரைப் பதிதன்னுளே
சேர்ந்தன னேயைந்து செங்கைய னேநின் திரள்மருப்பை
ஏந்தின னேயென்னை ஆண்டவ னேயெனக் கென்னையனே.