பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனைத் தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வனரும் தன்மை அது ஆய் வரும் மஞ்சு உறையும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் பெருமை உலகு பெற விளங்கும் மேல் பால் பெண்ணா கட மூதூர்.
மற்று அப் பதியின் இடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார்; கற்றைச் சடையார் கழல் காதல் உடனே வளர்ந்த கருத்து உடையார்; அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார்; அடித்தொண்டு பற்றிப் பணி செய் கலிக்கம்பர் என்பார்; மற்று ஓர் பற்று இல்லார்.
ஆன அன்பர் தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால் தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பம் உற அளிப்பார்.
அன்ன வகையால் திருத்தொண்டு புரியும் நாளில் அங்கு ஒரு நாள் மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர் தமை எல்லாம் தொன்மை முறையே அமுது செயத் தொடங்கு விப்பார் அவர் தம்மை முன்னர் அழைத்துத் திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார்.
திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கிப் போனகமும் பொருந்து சுவையின் கறி அமுதும் புனிதத் தண்ணீர் உடன் மற்றும் அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்துக் கரக நீர் அளிக்க விரும்பும் கணவர் பெருந்தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின் கண்.
முன்பு தமக்குப் பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய் என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும் அன்பர் உடனே திருவேடம் தாங்கி அணைந்தார் ஒருவர் தாம் பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெருந்தகையார்.
கையால் அவர் தம் அடி பிடிக்கக் காதல் மனையார் முன்பு ஏவல் செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது, மலர் மொய்யார் வாசக் கரக நீர் வார்க்க முட்ட, முதல் தொண்டர் மையார் கூந்தல் மனையாரைப் பார்த்து மனத்துள் கருதுவார்.
வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர்; முன் மேவும் நிலை குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு, மறித்து நோக்கார்; வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கை தறித்துக் கரக நீர் எடுத்துத் தாமே அவர் தாள் விளக்கினார்.
விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து துளக்கு இல் சிந்தை உடன் தொண்டர் தம்மை அமுது செய்வித்தார் அளப்பு இல் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள் நிழல் கீழ் அடியாருடன் கலந்தார்.
ஓதம் மலிநீர் விடம் உண்டார் அடியார் என்று உணரா மாதர் ஆர் கை தடிந்த கலிக் கம்பர் மலர்ச் சேவடி வணங்கிப் பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த காதல் அன்பர் கலிநீதியார் தம் பெருமை கட்டுரைப்பாம்.