பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

கழற்சிங்க நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்
கடிமதில் மூன்றும் செற்ற கங்கைவார் சடையார் செய்ய
அடிமலர் அன்றி வேறு ஒன்று அறிவினில் குறியா நீர்மைக்
கொடி நெடும் தானை மன்னர் கோக் கழற்சிங்கர் என்பார்.

2

காடவார் குரிசில் ஆர் ஆம் கழல் பெரும் சிங்கனார் தாம்
ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று
கூடலர் முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டு
நாடு அற நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில்.

3

குவலயத்து அரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்று
தவலரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய்த் தொண்டு செய்வார்
சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்திப்
பவம் அறுத்து ஆள் கொள் வார்தம் கோயில் உள் பணியப் புக்கார்.

4

அரசியல் ஆயத் தோடும் அங்கணர் கோயில் உள்ளால்
முரசு உடைத்தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில்
விரைசெறி மலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார் தம் உள்
உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனித் தேவி மேவி.

5

கோயிலை வலம் கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம்
சாயல் மா மயிலே போல் வாள் தனித் தனி கண்டு உவந்து
தூய மென் பள்ளித் தாமம் தொடுக்கும் மண்டபத்தின் பாங்கர்
மேயது ஓர் புதுப்பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள்.

6

புதுமலர் மோந்த போதில் செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற்றத்துள் எடுத்து மோந்தனள் ஆம் என்று,
கதும் என ஓடிச்சென்று, கருவி கைக் கொண்டு பற்றி,
மதுமலர்த் திருஒப்பாள் தன் மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.

7

வார்ந்து இழி குருதி சோர, மலர்க் கரும் குழலும் சோரச்
சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் எனத் துளங்கி மண்ணில்
சேர்ந்து அயர்ந்து உரிமைத் தேவி புலம்பிடச் செம்பொன் புற்றுள்
ஆர்ந்த பேர் ஒளியைக் கும்பிட்டு அரசரும் அணைய வந்தார்.

8

வந்து அணை உற்ற மன்னர் மலர்ந்த கற்பகத்தின் வாசப்
பைந்தளிர்ப் பூங்கொம்பு ஒன்று பார்மிசை வீழ்ந்தது என்ன
நொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இவ் அண்டத்து உள்ளோர்
இந்த வெவ்வினை அஞ்சாதே ஆர் செய்தார் ? என்னும் எல்லை.

9

அந்நிலை அணைய வந்து செருத்துணை யார் ஆம் அன்பர்
முன் உறு நிலைமை அங்குப் புகுந்தது மொழிந்தபோது
மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்குஉற்ற தண்டம்.

10

கட்டிய உடைவாள் தன்னை உருவி, அக்கமழ் வாசப்பூத்
தொட்டு முன் எடுத்த கை ஆம் முன்படத் துணிப்பது என்று
பட்டமும் அணிந்து காதல் பயில் பெருந்தேவி ஆன
மட்டு அவிழ் குழலாள் செங்கை வளையொடும் துணித்தார் அன்றே.

11

ஒரு தனித் தேவி செங்கை உடைவாளால் துணித்த போது,
பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்குஒலி புலி மேல் பொங்க,
இரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி
மருவிய தெய்வ வாச மலர் மழை பொழிந்தது அன்றே.

12

அரிய அத் திருத் தொண்டு ஆற்றும் அரசனார் அளவில் காலம்
மருவிய உரிமை தாங்கி மால் அயற்கு அரியார் மன்னும்
திரு அருள் சிறப்பினாலே செய்ய சே வடியின் நீழல்
பெருகிய உரிமை ஆகும் பேர் அருள் எய்தினாரே.

13

வையகம் நிகழ்க் காதல் மாதேவி தனது செய்ய
கையினைத் தடிந்த சிங்கர் கழல் இணை தொழுது போற்றி
எய்திய பெருமை அன்பர் இடம் கழியார் என்று ஏத்தும்
மெய் அருள் உடைய தொண்டர் செய்வினை விளம்பல் உற்றாம்.