பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பூத நாயகர் புற்று இடம் கொண்டவர் ஆதி தேவர் அமர்ந்த பூங் கோயிலில் சோதி மா மணி நீள் சுடர் முன்றில் சூழ் மூது எயில் திரு வாயில் முன் ஆயது;
பூவார் திசை முகன் இந்திரன் பூமிசை மா வாழ் அகலத்து மால் முதல் வானவர் ஓவாது எவரும் நிறைந்து உறைந்து உள்ளது தேவா சிரியன் எனும் திருக் காவணம்.
அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல் நிரந்த நீற்று ஒளியால், நிறை தூய்மையால் புரந்த அஞ்சு எழுத்து ஓசை பொலிதலால் பரந்த ஆயிரம் பால் கடல் போல்வது;
அகில காரணர் தாள் பணிவார்கள் தாம் அகில லோகமும் ஆளற்கு உரியர் என்று அகில லோகத்து உளார்கள் அடைதலின் அகில லோகமும் போல்வது; அதன் இடை.
அத்தர் வேண்டி முன் ஆண்டவர்; அன்பினால் மெய்த் தழைந்து விதிர்ப்புஉறு சிந்தையார்; கைத் திருத் தொண்டு செய்கடப் பாட்டினார்; இத்திறத்தவர் அன்றியும் எண் இலார்;
மாசு இலாத மணி திகழ் மேனி மேல் பூசும் நீறு போல் உள்ளும் புனிதர்கள் தேசினால் எத் திசையும் விளக்கினார்; பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்;
பூதம் ஐந்தும் நிலையில் கலங்கினும் மாது ஓர் பாகர் மலர்த்தாள் மறப்பு இலார்; ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்; கோது இலாத குணப் பெருங் குன்றுஆனார்.
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்; ஓடும் செம் பொனும் ஒக்கவே நோக்குவார்; கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்;
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலார்; ஈர அன்பினர்; யாதும் குறைவு இலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ?
வேண்டு மாறு விருப்பு உறும் வேடத்தர்; தாண்ட வப் பெருமான் தனித் தொண்டர்கள்; நீண்ட தொல் புகழ் ஆர் தம் நிலைமையை ஈண்டு வாழ்த்து கேன்; என்ன அறிந்து ஏத்துகேன்?
இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான் அந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன் சுந்தரத் திருத் தொண்டத் தொகைத் தமிழ் வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம்.