பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கீதம் இனிய குயிலே! கேட்டியேல், எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவின், பாதாளம் ஏழினுக்கு அப்பால்; சோதி மணி முடி சொல்லின், சொல் இறந்து நின்ற தொன்மை ஆதி குணம் ஒன்றும் இல்லான்; அந்தம் இலான்; வரக் கூவாய்!
ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த, எவ் உருவும் தன் உரு ஆய், ஆர்கலி சூழ் தென் இலங்கை, அழகு அமர் வண்டோதரிக்கு, பேர் அருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை; சீரிய வாயால், குயிலே! தென் பாண்டி நாடனை; கூவாய்!
நீல உருவின் குயிலே! நீள் மணி மாடம் நிலாவும் கோல அழகின் திகழும் கொடி மங்கை உள்ளுறை கோயில், சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை, ஞாலம் விளங்க இருந்த நாயகனை, வரக் கூவாய்!
தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே! இது கேள் நீ, வான் பழித்து, இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்; ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்; மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை; நீ வரக் கூவாய்!
சுந்தரத்து இன்பக் குயிலே! சூழ் சுடர் ஞாயிறு போல, அந்தரத்தே நின்று இழிந்து, இங்கு, அடியவர் ஆசை அறுப்பான்; முந்தும், நடுவும், முடிவும், ஆகிய மூவர் அறியாச் சிந்துரச் சேவடியானை; சேவகனை; வரக் கூவாய்!
இன்பம் தருவன்; குயிலே! ஏழ் உலகும் முழுது ஆளி; அன்பன்; அமுது அளித்து ஊறும் ஆனந்தன்; வான் வந்த தேவன்; நன் பொன் மணிச் சுவடு ஒத்த நல் பரிமேல் வருவானை; கொம்பின் மிழற்றும் குயிலே! கோகழி நாதனை; கூவாய்!
உன்னை உகப்பன்; குயிலே! உன் துணைத் தோழியும் ஆவன், பொன்னை அழித்த நல் மேனிப் புகழின் திகழும் அழகன், மன்னன், பரிமிசை வந்த வள்ளல், பெருந்துறை மேய தென்னவன், சேரலன், சோழன், சீர்ப் புயங்கன், வரக் கூவாய்!
வா, இங்கே, நீ, குயில் பிள்ளாய்! மாலொடு நான்முகன் தேடி, ஓவி, அவர் உன்னிநிற்ப, ஒண் தழல் விண் பிளந்து ஓங்கி, மேவி, அன்று, அண்டம் கடந்து, விரி சுடர் ஆய், நின்ற மெய்யன்; தாவி வரும் பரிப் பாகன்; தாழ் சடையோன்; வரக் கூவாய்!
கார் உடைப் பொன் திகழ் மேனி, கடி பொழில் வாழும், குயிலே! சீர் உடைச் செம் கமலத்தில் திகழ் உரு ஆகிய செல்வன்; பாரிடைப் பாதங்கள் காட்டி, பாசம் அறுத்து, எனை ஆண்ட ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை; நீ, வரக் கூவாய்!
கொந்து அணவும் பொழில் சோலைக் கூம் குயிலே! இது கேள் நீ; அந்தணன் ஆகி வந்து, இங்கே, அழகிய சேவடி காட்டி, எம் தமர் ஆம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும், செம் தழல் போல் திருமேனித் தேவர் பிரான், வரக் கூவாய்!