பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த, நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல், சீர் உலாவும் மறையோர் நறையூரில், சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!
காடும் நாடும் கலக்கப் பலி நண்ணி, ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ, வீடும் ஆக மறையோர் நறையூரில், நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!
கல்வியாளர், கனகம் அழல் மேனி புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர், மல்கு திங்கள் பொழில் சூழ், நறையூரில் செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!
நீட வல்ல நிமிர் புன்சடை தாழ ஆட வல்ல அடிகள் இடம் ஆகும், பாடல் வண்டு பயிலும், நறையூரில் சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!
உம்பராலும் உலகின் அவராலும் தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர், நண்பு உலாவும் மறையோர், நறையூரில் செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!
கூர் உலாவு படையான், விடை ஏறி, போர் உலாவு மழுவான், அனல் ஆடி, பேர் உலாவு பெருமான், நறையூரில் சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே.
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த வென்றி வில்லி விமலன்-விரும்பும் ஊர், மன்றில் வாச மணம் ஆர், நறையூரில் சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!
அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால் நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர், பரக்கும் கீர்த்தி உடையார், நறையூரில் திருக்கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!
ஆழியானும் அலரின் உறைவானும் ஊழி நாடி உணரார் திரிந்து, மேல் சூழும் நேட, எரி ஆம் ஒருவன் சீர் நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!
மெய்யின் மாசர், விரி நுண் துகில் இலார், கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்! உய்ய வேண்டில், இறைவன் நறையூரில் செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே.
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில் சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன் பத்தும் பாட, பறையும், பாவமே.
பிறை கொள் சடையர்; புலியின் உரியர்; பேழ்வாய் நாகத்தர்; கறை கொள் கண்டர்; கபாலம் ஏந்தும் கையர்; கங்காளர் மறை கொள் கீதம் பாடச் சேடர் மனையில் மகிழ்வு எய்தி, சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
பொங்கு ஆர் சடையர்; புனலர்; அனலர் பூதம் பாடவே, தம் காதலியும் தாமும் உடன் ஆய்த் தனி ஓர் விடை ஏறி, கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி, குளிர்பொய்கைச் செங்கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சரத்தாரே.
முடி கொள் சடையர்; முளை வெண்மதியர்; மூவா மேனிமேல் பொடி கொள் நூலர்; புலியின் அதளர் புரிபுன் சடை தாழ, கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாயக் கொடி கொள் மாடக்குழாம் ஆர் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
பின் தாழ் சடைமேல் நகுவெண்தலையர்; பிரமன் தலை ஏந்தி, மின் தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர் பொன் தாழ் கொன்றை, செருந்தி, புன்னை, பொருந்து, செண்பகம், சென்று ஆர் செல்வத் திரு ஆர் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
நீர் ஆர் முடியர்; கறை கொள் கண்டர்; மறைகள் நிறை நாவர் பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே, தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல, சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
நீண்ட சடையர்; நிரை கொள் கொன்றை விரை கொள் மலர்மாலை தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனிப் பவளத்து எழிலார் வந்து ஈண்டு மாடம், எழில் ஆர் சோலை, இலங்கு கோபுரம், தீண்டு மதியம் திகழும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
குழல் ஆர் சடையர்; கொக்கின் இறகர்; கோல நிற மத்தம் தழல் ஆர் மேனித் தவள நீற்றர்; சரி கோவணக்கீளர் எழில் ஆர் நாகம் புலியின் உடைமேல் இசைத்து, விடை ஏறி, கழல் ஆர் சிலம்பு புலம்ப, வருவார் சித்தீச்சரத்தாரே.
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலைமலை தன்னை வரை ஆர் தோளால் எடுக்க, முடிகள் நெரிந்து மனம் ஒன்றி உரை ஆர் கீதம் பாட, நல்ல உலப்பு இல் அருள் செய்தார் திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
நெடியான் பிரமன் நேடிக் காணார் நினைப்பார் மனத்தாராய், அடியார் அவரும் அருமா மறையும் அண்டத்து அரரும் முடியால் வணங்கிக் குணங்கள் ஏத்தி, “முதல்வா, அருள்!” என்ன, செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
நின்று உண் சமணர், இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார், ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள்! கன்று உண் பயப்பால் உண்ண முலையில், கபாலம் அயல் வழிய, சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
குயில் ஆர் கோல மாதவிகள், குளிர் பூஞ்சுர புன்னை, செயில் ஆர் பொய்கை, சேரும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரை, மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன், பயில்வார்க்கு இனிய, பாடல் வல்லார் பாவம் நாசமே.