பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
சேந்தனார் - திருவாவடுதுறை
வ.எண் பாடல்
1

பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப்
புகழாள ராயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர்
மிகுகா விரிக்கரை மேய
ஐயா திருவா வடுதுறை
யமுதேயென் றுன்னை யழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்கொன்
றருளா தொழிவது மாதிமையே.

2

மாதி மணங்கம ழும்பொழில்
மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச்
சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி யமரர் புராணனாம்
அணிஆ வடுதுறை நம்பிநின்ற
நீதி யறிகிலள், பொன்னெடுந்
திண்டோள் புணர நினைக்குமே.

3

நினைக்கும் நிரந்தர னேயென்னும்
நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்
நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர்
மனக்கின்ப வெள்ள மலைமகள்
மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்டுறைத்
தருணேந்து சேகரன் என்னுமே.

4

தருணேந்து சேகர னேயெனுந்
தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்
பொருணேர்ந்த சிந்தை யவர்தொழப்
புகழ்செல்வ மல்குபொற் கோயிலுள்
அருணேர்ந் தமர்திரு வாவடு
துறையாண்ட ஆண்டகை யம்மானே
தெருணேர்ந்த சித்தம் வலியவா
திலக நுதலி திறத்திலே.

5

திலக நுதல்உமை நங்கைக்கும்
திருவா வடுதுறை நம்பிக்கும்
குலக அடியவர்க் கென்னையாட்
கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல்
அலதொன் றறிகின்றி லேமெனும்
அணியும்வெண் ணிறஞ் செழுத்தலால்
வலதொன் றிலள்இதற் கென்செய்கேன்
வயல்அந்தண் சாந்தையர் வேந்தனே.

6

வேந்தன் வளைத்தது மேருவில்;
அரவுநாண் வெங்கணை செங்கண்மால்;
போந்த மதிலணி முப்புரம்
பொடியாட வேதப்புர வித்தேர்ச்
சாந்தை முதல்அயன் சாரதி;
கதிஅருள் என்னுமித் தையலை
ஆந்தண் திருவா வடுதுறை
யான்செய்கை யார்அறி கிற்பரே

7

கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக்
கெடுத்தோடிக் கெட்டஅத் தேவர்கள்
சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள்
என்சொல்லிச் சொல்லும்இத் தூமொழி
கற்போல் மனங்கனி வித்தஎம்
கருணால யாவந்திடாய் என்றாற்
பெற்போ பெருந்திரு வாவடு
துறையாளி பேசா தொழிவதே.

8

ஒழிவொன்றி லாஉண்மை வண்ணமும்
உலப்பிலள் ஊறின்ப வெள்ளமும்
மொழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும்
முனிகோடி கோடியா மூர்த்தியும்
அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர்
அணிஆ வடுதுறை ஆடினாள்
இழிவொன்றி லாவகை யெய்திநின்
றிறுமாக்கும் என்னிள மானனே.

9

மானேர் கலைவளை யுங்கவர்ந்
துளங்கொள்ளை கொள்ள வழக்குண்டே
தேனே அமுதேஎன் சித்தமே
சிவலோக நாயகச் செல்வமே
ஆனேஅ லம்பு புனற்பொன்னி
அணிஆ வடுதுறை அன்பர்தம்
கோனேநின் மெய்யடி யார்மனக்
கருத்தை முடித்திடுங் குன்றமே.

10

குன்றேந்தி கோகன கத்தயன்
அறியா நெறிஎன்னைக் கூட்டினாய்
யென்றேங்கி ஏங்கிஅ ழைக்கின்றாள்
இளவல்லி எல்லைக டந்தனள்
அன்றேஅ லம்ப புனற்பொன்னி
அணிஆ வடுதுறை யாடினாள்
நன்றே யிவள்நம் பரமல்லள்
நவலோக நாயகன் பாலளே

11

பாலும் அமுதமும் தேனுமாய்
ஆனந்தந் தந்துள்ளே பாலிப்பான்
போலும்என் ஆருயிர்ப் போகமாம்
புரகால காம புராந்தகன்
சேலுங் கயலுந் திளைக்கும்நீர்த்
திருவா வடுதுறை வேந்தனோ
டாலு மதற்கே முதலுமாம்
அறிந்தோம் அரிவைபொய் யாததே.