பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவெண்காடு
வ.எண் பாடல்
1

கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும்,
பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்,
பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும்,
வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.

2

பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு உள்ளம்
நினைவு
ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்;
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள
நீர்
தோய் வினையார் அவர்தம்மைத் தோயா ஆம்,
தீவினையே.

3

மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி, இரவி,
எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும்,
பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம்
பேராளன்
விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா
விரும்பினனே.

4

விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின்
தண்புறவில்,
மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று,
தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய,
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.

5

வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்
மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன்
தூதர்,
ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே.

6

தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின் உடன்;
ஒண்மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத, பசுங்கிள்
வெண் முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும்
வெண்காடே.

7

க்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்;
அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்து அயிராவதம்
பணிய,
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை
துரக்கும்
முக்குளம், நன்கு உடையானும் முக்கண் உடை
இறையவனே

8

பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான்
உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட, கடல் முழங்க,
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும்
வெண்காடே.

9

கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான், என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும்,
உணர்வு அரியான்
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள் ஆடி உருகாதார் உணர்வு, உடைமை, உணரோமே.

10

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும்
பேதையர்கள் அவர்; பிரிமின்! அறிவு உடையீர்! இது
கேண்மின்;
"வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான்"
என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே!

11

தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை
வெண்காட்டைப்
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை
வல்லார்,
மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப் புகுவாரே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவெண்காடு
வ.எண் பாடல்
1

உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா! என்று உள்கித்
தொண்டு ஆய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான், எந்தை, ஊர்போலும்
வெண் தாமரை மேல் கருவண்டு யாழ் செய் வெண்காடே.

2

நாதன்! நம்மை ஆள்வான்! என்று நவின்று ஏத்தி,
பாதம் பல் நாள் பணியும் அடியார் தங்கள் மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே.

3

தண் முத்து அரும்பத் தடம் மூன்று உடையான் தனை
உன்னி,
கண் முத்து அரும்பக் கழல் சேவடி கைதொழுவார்கள்
உள் முத்து அரும்ப, உவகை தருவான் ஊர்போலும்
வெண் முத்து அருவிப் புனல் வந்து அலைக்கும்
வெண்காடே

4

நரையார் வந்து நாளும் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே,
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர்போலும்
விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே.

5

பிள்ளைப்பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறு நோய்கள்
தள்ளிப் போக அருளும் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச்சுரி சங்கு உலவித் திரியும் வெண்காடே

6

ஒளி கொள் மேனி உடையாய்! உம்பர் ஆளீ! என்று
அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார் கட்கு
எளியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும்
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே.

7

கோள் வித்து அனைய கூற்றம் தன்னைக் குறிப்பினால்
மாள்வித்து, அவனை மகிழ்ந்து அங்கு ஏத்து மாணிக்கு
ஆய்
ஆள்வித்து, அமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
வேள்விப் புகையால் வானம் இருள் கூர் வெண்காடே.

8

வளை ஆர் முன்கை மலையாள் வெருவ, வரை ஊன்றி,
முளை ஆர் மதியம் சூடி, என்றும் முப்போதும்
இளையாது ஏத்த இருந்தான்; எந்தை; ஊர்போலும்
விளை ஆர் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே.

9

காரியானோடு, கமலமலரான், காணாமை
எரி ஆய் நிமிர்ந்த எங்கள் பெருமான்! என்பார்கட்கு
உரியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும்
விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.

10

பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்து ஏத்த,
ஆடும் அரவம் அசைத்த பெருமான்; அறிவு இன்றி
மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான்; பதி ஆம் வெண்காடே.

11

விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.