பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருமயேந்திரப்பள்ளி
வ.எண் பாடல்
1

திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்,
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும்,
வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப் பள்ளியுள்
அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே!

2

கொண்டல் சேர் கோபுரம், கோலம் ஆர் மாளிகை,
கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும்,
வண்டு உலாம் பொழில், அணி மயேந்திரப் பள்ளியுள்
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணிமினே!

3

கோங்கு இள வேங்கையும், கொழு மலர்ப்புன்னையும்,
தாங்கு தேன் கொன்றையும், தகு மலர்க்குரவமும்,
மாங் கரும்பும், வயல் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணிமினே!

4

வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு
சங்கம் ஆர் ஒலி, அகில் தரு புகை கமழ்தரும்
மங்கை ஓர் பங்கினன், மயேந்திரப் பள்ளியுள்
எங்கள் நாயகன் தனது இணை அடி பணிமினே!

5

நித்திலத் தொகை பல நிரை தரு மலர் எனச்
சித்திரப் புணரி சேர்த்திட, திகழ்ந்து இருந்தவன்,
மைத் திகழ் கண்டன், நல் மயேந்திரப் பள்ளியுள்
கைத்தலம் மழுவனைக் கண்டு, அடி பணிமினே!

6

சந்திரன், கதிரவன், தகு புகழ் அயனொடும்,
இந்திரன், வழிபட இருந்த எம் இறையவன்-
மந்திரமறை வளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்மினே!

7

சடை முடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடம் நவில் புரிவினன், நறவு அணி மலரொடு
படர்சடை மதியினன், மயேந்திரப் பள்ளியுள்
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்மினே!

8

சிரம் ஒருபதும் உடைச் செரு வலி அரக்கனைக்
கரம் இருபதும் இறக் கனவரை அடர்த்தவன்,
மரவு அமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்மினே!

9

நாக(அ)ணைத் துயில்பவன், நலம் மிகு மலரவன்,
ஆக(அ)ணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர்;
மாகு அணைந்து அலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்மினே!

10

உடை துறந்தவர்களும், உடை துவர் உடையரும்,
படு பழி உடையவர் பகர்வன விடுமின், நீர்
மடை வளர் வயல் அணி மயேந்திரப் பள்ளியுள்
இடம் உடை ஈசனை இணை அடி பணிமினே!

11

வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல்,
“நம் பரம் இது” என, நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள, உயர் பதி அணைவரே.