பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆவடுதுறை
வ.எண் பாடல்
1

நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை;
மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்-
பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு-
துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே.

2

தவளமாமதிச் சாயல் ஓர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன், எம் இறை,
அளவு கண்டிலள்; ஆவடுதண்துறைக்
களவு கண்டனள் ஒத்தனள்-கன்னியே.

3

பாதி பெண் ஒருபாகத்தன்; பல்மறை
ஓதி; என் உளம் கொண்டவன்; ஒண் பொருள்
ஆதி-ஆவடுதண்துறை மேவிய
சோதியே! சுடரே! என்று சொல்லுமே.

4

கார்க் கொள் மா முகில் போல்வது ஓர் கண்டத்தன்;
வார்க்கொள் மென்முலை சேர்ந்து இறுமாந்து, இவள்
ஆர்க் கொள் கொன்றையன்; ஆவடுதண்துறைத்
தார்க்கு நின்று இவள் தாழுமா காண்மினே!

5

கருகு கண்டத்தன், காய் கதிர்ச் சோதியன்,
பருகு பால் அமுதே எனும் பண்பினன்,
அருகு சென்று இவள், ஆவடுதண்துறை
ஒருவன் என்னை உடைய கோ என்னுமே.

6

குழலும், கொன்றையும், கூவிளம், மத்தமும்,
தழலும், தையல் ஓர்பாகமாத் தாங்கினான்;
அழகன்; ஆவடுதண்துறையா! எனக்
கழலும், கைவளை காரிகையாளுக்கே.

7

பஞ்சின் மெல் அடிப் பாவை ஓர்பங்கனைத்
தஞ்சம் என்று இறுமாந்து, இவள் ஆரையும்
அஞ்சுவாள் அல்லள்; ஆவடுதண்துறை
மஞ்சனோடு இவள் ஆடிய மையலே!

8

பிறையும் சூடி, நல் பெண்ணொடு ஆண் ஆகி, என்
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்;
அறையும் பூம்பொழில் ஆவடுதண்துறை
இறைவநென்னை உடையவன் என்னுமே.

9

வையம் தான் அளந்தானும் அயனும் ஆய்
மெய்யைக் காணல் உற்றார்க்கு அழல் ஆயினான்;
ஐயன்; ஆவடுதண்துறையா! என,
கையில் வெள்வளையும் கழல்கின்றதே.

10

பக்கம் பூதங்கள் பாட, பலி கொள்வான்;
மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்;
அக்கு அணிந்தவன் ஆவடுதண் துறை
நக்கன் என்னும், இந் நாண் இலி; காண்மினே!