பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஏழாம் தந்திரம் / அடியார் பெருமை
வ.எண் பாடல்
1

திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும்
வகைக்கு உரியான் ஒருவாதி இருக்கில்
பகைக்கு உரியார் இல்லை பார் மழை பெய்யும்
அகக் குறை கேடு இல்லை அவ் உலகுக்கே.

2

அவ் உலகத்தே பிறந்த அவ் உடலொடும்
அவ் உலகத்தே அரும் தவம் நாடுவர்
அவ் உலகத்தே அரன் அடி கூடுவர்
அவ் உலகத்தே அருள் பெறுவாரே.

3

கொண்ட குறியும் குல வரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண் திசை யோரும் வந்து என் கைத் தலத்தின் உள்
உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே.

4

அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பு அளிப்பு ஆதியும்
கண்ட சிவனும் கண் அன்றி இல்லையே.

5

பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள்
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணாக்
கண் இன்றிக் காணும் செவி இன்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.

6

இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழி செல்வர் வான் உலகு ஆள்வர்
புயங்களும் எண்திசை போது பாதாள
மயங்காப் பகிரண்ட மா முடி தானே.

7

அகம் படிகின்ற நம் ஐயனை ஓரும்
அகம் படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம் படி உள் புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம் படி கண்டாம் அழிக்கலும் எட்டே.

8

கழிவு முதலும் காதல் துணையும்
அழிவும் அதாய் நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியும் என் ஆவி உழவு கொண்டானே.

9

என் தாயோ என் அப்பன் ஏழ் ஏழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றா உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில் வண்ணன் ஏர் எழுந்தாயே.

10

துணிந்தார் அகம் படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால் பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்குக் கைவிடல் ஆமே.

11

தலை மிசை வானவர் தாள் சடை நந்தி
மிலை மிசை வைத்தனன் மெய்ப் பணி செய்யப்
புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும்
பல மிசை செய்யும் படர் சடை யோனே

12

அறியாப் பருவத்து அரன் அடியாரைக்
குறியால் அறிந்து இன்பம் கொண்டது அடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல் மூழ்க மாதவம் ஆமே.

13

அவன் பால் அணுகியே அன்பு செய்வார்கள்
சிவன் பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன் பால் அணுகியே நாடும் அடியார்
இவன் பால் பெருமை இலயம் அதாமே.

14

முன் இருந்தார் முழுதும் எண் கணத் தேவர்கள்
எண் இறந்து தன் பால் வருவர் இருநிலத்து
எண் இரு நாலு திசை அந்தரம் ஒக்கப்
பன்னிரு காதம் பதம் செய்யும் பாரே.

15

சிவ யோகிஞானி செறிந்த அத் தேசம்
அவ யோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
நவ யோகம் கை கூடும் நல் இயல் காணும்
பவ யோகம் இன்றிப் பரலோகம் ஆமே.

16

மேல் உணர்வான் மிகு ஞாலம் படைத்தவன்
மேல் உணர்வான் மிகு ஞாலம் கடந்தவன்
மேல் உணர்வார் மிகுஞாலத்து அமரர்கள்
மேல் உணர்வார் சிவன் மெய் அடியார்களே