பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஞானத்தின் மிக்க அற நெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்று அன்று ஞானத்தின் மிக்கவை நல் முத்தி நல்காவா ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே.
சத்தமும் சத்த மனனும் தகுமனம் உய்த்த உணர்வு உணர்த்தும் அகந்தையும் சித்தம் என்று இம் மூன்றும் சிந்திக்கும் செய்கையும் சத்தம் கடந்தவர் பெற்ற சன்மார்க்கமே.
தன்பால் உலகும் தனக்கு அருகு ஆவதும் அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன என்பார்கள் ஞானமும் எய்தும் சிவயோகமும் பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே.
இருக்கும் சேம இடம் பிரமம் ஆகும் வருக்கம் சராசரம் ஆகும் உலகம் தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்து உணர்ந்தோர்க்கே.
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே பிறியா நகர் மன்னும் பேர் அருளாளன் குறியும் குணமும் குரை கழல் நீங்கா நெறி அறிவார்க்கு இது நீர்த் தொனியாமே
ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தையுள் ஏனம் விளைந்து எதிரே காண்வழி தொறும் கூனல் மதி மண்டலத்து எதிர் நீர் கண்டு ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆகுமே.
ஞானிக்கு உடன் குண ஞானத்தில் நான்கும் ஆம் மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து மேல் நிற்றல் ஆம் சத்தி வித்தை விளைத்திடும் தான் இக் குலத்தோர் சரியை கிரியையே.
ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல் ஞானத்தில் யோகமே நாத அந்த நல் ஒளி ஞானக் கிரியையே நல் முத்தி நாடலே.
நண்ணிய ஞானத்தின் ஞான ஆதி நண்ணுவோன் புண்ணிய பாவம் கடந்த பிணக்கு அற்றோன் கண்ணிய நேயம் கரைஞானம் கண்டு உளோன் திண்ணிய சுத்தன் சிவ முத்தன் சித்தனே.
ஞானச் சமயமே நாடும் தனைக் காண்டல் ஞான விசேடமே நாடு பரோதய ஞான நிர்வாணமே நன்று அறிவான் அருள் ஞான அபிடேகமே நற்குரு பாதமே.