கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்,
கரையிலாக் கருணைமா கடலை,
மற்றவர் அறியா மாணிக்க மலையை,
மதிப்பவர் மனமணி விளக்கைச்,
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிரஎன் கண்குளிர்ந் தனவே.