தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
சசிகுலா மவுலியைத், தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
எழுஞ்செழுஞ் சுடரினை, அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை, வீழி
மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
விடுவனோ பூண்டுகொண் டேனே!