பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அக்கு இருந்த ஆரமும், ஆடு அரவும், ஆமையும், தொக்கு இருந்த மார்பினான்; தோல் உடையான்; வெண் நீற்றான்; புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
நீர் ஆர வார்சடையான், நீறு உடையான், ஏறு உடையான், கார் ஆர் பூங்கொன்றையினான், காதலித்த தொல் கோயில் கூர் ஆரல் வாய் நிறையக் கொண்டு அயலே கோட்டகத்தில் தாரா இல்கு ஆக்கூரில் - தன் தோன்றி மாடமே.
வாள் ஆர் கண், செந்துவர்வாய், மாமலையான் தன் மடந்தை தோள் ஆகம் பாகமாப் புல்கினான் தொல் கோயில் வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
கொங்கு சேர் தண்கொன்றை மாலையினான், கூற்று அடரப் பொங்கினான், பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான், பூங்கோயில் அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி தங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
வீக்கினான், ஆடு அரவம்; வீழ்ந்து அழிந்தார் வெண் தலை என்பு ஆக்கினான், பல்கலன்கள்; ஆதரித்துப் பாகம் பெண் ஆக்கினான்; தொல் கோயில் ஆம்பல் அம்பூம் பொய்கை புடை தாக்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
பண் ஒளி சேர் நால்மறையான், பாடலினோடு ஆடலினான், கண் ஒளி சேர் நெற்றியினான், காதலித்த தொல் கோயில் விண் ஒளி சேர் மா மதியம் தீண்டியக்கால் வெண் மாடம் தண் ஒளி சேர் ஆக்கூரில் தான் தோன்றிமாடமே.
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்து அவிய வாங்கினார், வானவர்கள் வந்து இறைஞ்சும், தொல் கோயில் பாங்கின் ஆர் நால்மறையோடு ஆறு அங்கம் பல்கலைகள் தாங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடரக் கால் ஊன்றி, இன் அருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் பொன் அடிக்கே நாள்தோறும் பூவோடு நீர் சுமக்கும் தன் அடியார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய தொன்மையான், தோற்றம் கேடு இல்லாதான், தொல் கோயில் இன்மையால் சென்று இரந்தார்க்கு, "இல்லை" என்னாது, ஈந்து உவக்கும் தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
நா மருவு புன்மை நவிற்ற, சமண் தேரர், பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில் சேல் மருவு பைங்கயத்துச் செங்கழு நீர் பைங்குவளை தாம் மருவும் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
ஆடல் அமர்ந்தானை, ஆக்கூரில் தான் தோன்றி மாடம் அமர்ந்தானை, மாடம் சேர் தண் காழி, நாடற்கு அரிய சீர், ஞானசம்பந்தன் சொல் பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.