பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
முன்னை நால் மறை அவை முறை முறை, குறையொடும், தன்ன தாள் தொழுது எழ நின்றவன் தன் இடம் மன்னு மா காவிரி வந்து அடி வருட, நல் செந்நெல் ஆர் வளவயல்-தென்குடித்திட்டையே.
மகரம் ஆடும் கொடி மன் மத வேள் தனை, நிகரல் ஆகா நெருப்பு எழ, விழித்தான் இடம் பகர வாள் நித்திலம், பல்மகரத்தோடும், சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே.
கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன், உருவினால் அன்றியே உருவு செய்தான், இடம் பருவ நாள், விழவொடும் பாடலோடு ஆடலும் திருவினால் மிகு புகழ்த் தென்குடித்திட்டையே.
உள்-நிலாவு ஆவி ஆய் ஓங்கு தன் தன்மையை விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர் எண் இல் ஆர் எழில் மணிக் கனக மாளிகை இளந் தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே
வருந்தி வானோர்கள் வந்து அடைய, மா நஞ்சு தான் அருந்தி, ஆர் அமுது அவர்க்கு அருள் செய்தான் அமரும் ஊர் செருந்தி, பூமாதவிப் பந்தர், வண் செண்பகம், திருந்து நீள் வளர் பொழில்-தென்குடித்திட்டையே.
ஊறினார், ஓசையுள் ஒன்றினார், ஒன்றி மால் கூறினார், அமர்தரும் குமரவேள்தாதை ஊர் ஆறினார் பொய் அகத்து, ஐஉணர்வு எய்தி மெய் தேறினார், வழிபடும் தென்குடித்திட்டையே.
கான் அலைக்கும்(ம்) அவன் கண் இடந்து அப்ப, நீள வான் அலைக்கும் தவத் தேவு வைத்தான் இடம் தான் அலைத் தெள் அம் ஊர், தாமரைத் தண்துறை தேன் அலைக்கும் வயல், தென்குடித்திட்டையே.
மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து ஓல் இடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம் காலொடும் கனகமூக்கு உடன்வர, கயல் வரால் சேலொடும் பாய் வயல்-தென்குடித்திட்டையே.
நாரணன் தன்னொடு நான்முகன்தானும் ஆய், காரணன்(ன்) அடி முடி காண ஒண்ணான் இடம் ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ, சீர் அணங்கும் புகழ்த் தென்குடித்திட்டையே.
குண்டிகைக் கை உடைக் குண்டரும், புத்தரும், பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர், தொழும் வண்டு இரைக்கும் பொழில்-தண்டலைக் கொண்டல் ஆர் தெண்திரைத் தண்புனல்,-தென்குடித்திட்டையே!
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை, கானல் ஆர் கடிபொழில் சூழ்தரும் காழியுள ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ் பால் நல் ஆர் மொழி வலார்க்கு, இல்லை ஆம், பாவமே.