பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருநள்ளாறு
வ.எண் பாடல்
1

உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,
தெள் ஆறாச் சிவசோதித்திரளினை,
கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை
நள்ளாறா! என, நம் வினை நாசமே.

2

ஆரணப் பொருள் ஆம் அருளாளனார்
வாரணத்து உரி போர்த்த மணாளனார்-
நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார்;
காரணக் கலைஞானக் கடவுளே.

3

மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு, எயில்
சோகம் பூண்டு அழல் சோர, தொட்டான் அவன்
பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு,
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே.

4

மலியும் செஞ்சடை வாள் அரவ(ம்)மொடு
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்,
நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர் தம்
வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே.

5

உறவனாய் நிறைந்து, உள்ளம் குளிர்ப்பவன்;
இறைவன் ஆகி நின்று, எண் நிறைந்தான் அவன்
நறவம் நாறும் பொழில்-திரு நள்ளாறன்;
மறவனாய்ப் பன்றிப் பின் சென்ற மாயமே!

6

செக்கர் அங்கு அழி செஞ்சுடர்ச் சோதியார்;
நக்கர்-அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார்;
வக்கரன்(ன்) உயிர் வவ்விய மாயற்குச்
சக்கரம்(ம்) அருள் செய்த சதுரரே.

7

வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர்;
விஞ்சையின் செல்வப் பாவைக்கு வேந்தனார்;
வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார்-
நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறரே.

8

அல்லன் என்றும் அலர்க்கு, அருள் ஆயின
சொல்லன் என்று,-சொல்லா மறைச்சோதியான்,-
வல்லன் என்றும், வல்லார் வளம் மிக்கவர்;
நல்லன், என்றும் நல்லார்க்கு, நள்ளாறனே.

9

பாம்பு அணைப் பள்ளி கொண்ட பரமனும்,
பூம் பணைப் பொலிகின்ற புராணனும்,
தாம் பணிந்து அளப்ப ஒண்ணாத் தனித் தழல்-
நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே.

10

இலங்கை மன்னன் இருபது தோள் இற
மலங்க மால்வரை மேல் விரல் வைத்தவர்,
நலம் கொள் நீற்றர், நள்ளாறரை, நாள் தொறும்
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.