பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஅரிசிற்கரைப்புத்தூர்
வ.எண் பாடல்
1

முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப்
புத்தூரன்(ன்) அடி போற்றி! என்பார் எலாம்
மொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே.

2

பிறைக்கணிச் சடை எம்பெருமான் என்று-
கறைக் கணித்தவர் கண்ட வணக்கத்து ஆய்
உறக் கணித்து-உருகா மனத்தார்களைப்
புறக்கணித்திடும், புத்தூர்ப் புனிதனே.

3

அரிசிலின் கரைமேல், அணி ஆர்தரு
புரிசை, நம் திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொடும் பரவிப் பணிவார்க்கு எலாம்
துரிசு இல் நன்நெறி தோன்றிடும்; காண்மினே!

4

வேதனை(ம்), மிகு வீணையில் மேவிய
கீதனை, கிளரும் நறுங்கொன்றை அம்-
போதனை, புனல் சூழ்ந்த புத்தூரனை,
நாதனை(ந்), நினைந்து என் மனம் நையுமே.

5

அருப்புப் போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல்
விருப்புச் சேர் நிலை விட்டு, நல் இட்டம் ஆய்,
திருப் புத்தூரனைச் சிந்தைசெயச் செய,
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும்; காண்மினே!

6

பாம்பொடு(ம்) மதியும் படர் புன் சடைப்
பூம்புனலும் பொதிந்த புத்தூர் உளான்,
நாம் பணிந்து அடி போற்றிட, நாள்தொறும்
சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே.

7

கனல் அங்கைதனில் ஏந்தி, வெங்காட்டு இடை
அனல் அங்கு எய்தி, நின்று, ஆடுவர்; பாடுவர்;
பினல் அம் செஞ்சடைமேல் பிலயம் தரு
புனலும் சூடுவர் போலும்-புத்தூரரே.

8

காற்றிலும் கடிது ஆகி நடப்பது ஓர்
ஏற்றினும்(ம்) இசைந்து ஏறுவர்; என்பொடு
நீற்றினை அணிவர்; நினைவுஆய்த் தமை,
போற்றி! என்பவர்க்கு அன்பர்-புத்தூரரே.

9

முன்னும் முப்புரம் செற்றனர் ஆயினும்
அன்னம் ஒப்பர், அலந்து அடைந்தார்க்கு எலாம்;
மின்னும் ஒப்பர், விரிசடை; மேனி செம்-
பொன்னும் ஒப்பர்-புத்தூர் எம் புனிதரே.

10

செருத்தனால்-தன தேர் செல உய்த்திடும்
கருத்தனாய்க் கயிலை எடுத்தான் உடல்,
பருத்த தோள் கெடப் பாதத்து ஒருவிரல்
பொருத்தினார்-பொழில் ஆர்ந்த புத்தூரரே.