பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கொடுங் கண் வெண்தலை கொண்டு, குறை விலைப் படும் கண் ஒன்று இலராய், பலி தேர்ந்து உண்பர்- நெடுங்கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்க் கடுங் கைக் கூற்று உதைத்திட்ட கருத்தரே.
வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள்வளை நீதியே கொளப்பாலது?-நின்றியூர் வேதம் ஓதி, விளங்கு வெண் தோட்டராய், காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே.
புற்றின் ஆர் அரவம் புலித்தோல்மிசைச் சுற்றினார்; சுண்ணப் போர்வை கொண்டார்; சுடர் நெற்றிக்கண் உடையார்; அமர் நின்றியூர் பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.
பறையின் ஓசையும், பாடலின் ஓசையும், மறையின் ஓசையும், மல்கி அயல் எலாம் நிறையும் பூம்பொழில் சூழ் திரு நின்றியூர் உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.
சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள், இனையன் என்று என்றும் ஏசுவது என் கொலோ? நினையும் தண்வயல் சூழ் திரு நின்றியூர்ப் பனையின் ஈர் உரி போர்த்த பரமரே!
உரைப்பக் கேண்மின், நும் உச்சி உளான்தனை! நிரைப் பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர் உரைப் பொன்கற்றையர் ஆர் இவரோ? எனில், திரைத்துப் பாடித் திரிதரும் செல்வரே.
கன்றி ஊர் முகில் போலும் கருங்களிறு இன்றி ஏறலனால்; இது என்கொலோ? நின்றியூர் பதி ஆக நிலாயவன், வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே.
நிலை இலா வெள்ளைமாலையன், நீண்டது ஓர் கொலை விலால் எயில் எய்த கொடியவன், நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர் உரையினால்-தொழுவார் வினை ஓயுமே.
அஞ்சி ஆகிலும் அன்பு பட்டு ஆகிலும் நெஞ்சம்! வாழி! நினை, நின்றியூரை நீ! இஞ்சிமா மதில் எய்து இமையோர் தொழக் குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.
எளியனா மொழியா இலங்கைக்கு இறை, களியினால் கயிலாயம் எடுத்தவன், நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர் அளியினால்-தொழுவார் வினை அல்குமே.