பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / சோதனை
வ.எண் பாடல்
1

பெம்மான் பெரு நந்தி பேச்சு அற்ற பேர் இன்பத்து
அம்மான் அடி தந்து அருள் கடல் ஆடினோம்
எம்மாயமும் விடுத்து எம்மைக் கரந்திட்டுச்
சும்மா இருந்து இடம் சோதனை ஆகுமே.

2

அறிவு உடையான் அரு மாமறை உள்ளே
செறிவு உடையான் மிகு தேவர்க்கும் தேவன்
பொறி உடையான் புலன் ஐந்தும் கடந்த
குறி உடையானொடும் கூடுவன் நானே.

3

குறியாக் குறியினில் கூடாத கூட்டத்து
அறியா அறிவில் அவிழ்ந்து ஏக சித்தம் ஆய்
நெறி ஆம் பரா நந்தி நீடு அருள் ஒன்றும்
செறியாச் செறிவே சிவம் எனலாமே.

4

காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும்
பாலின் உள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவின் உள் நாற்றமும் போல் உளன் எம் இறை
காவலன் எங்கும் கலந்து நின்றானே.

5

விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப்
பொருப்பு அகம் சேர் தரு பொன் கொடி போல
இருப்பர் மனத்து இடை எங்கள் பிரானார்
நெருப்பு உரு ஆகி நிகழ்ந்து நின்றாரே.

6

நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்து என் அகம் படி கோயில் கொண்டான் கொள்ள
எந்தை வந்தான் என்று எழுந்தேன் எழுதலும்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.

7

தன்மை வல்லோனைத் தத்துவத்துள் நலத்தினை
நன்மை வல்லோனை நடுவுறை நந்தியைப்
புன்மை பொய்யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் உம்மைப் பரிசு செய்வானே.

8

தொடர்ந்து நின்றான் என்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்து நின்றான் அல்ல நாதனும் அங்கே
படர்ந்து நின்று ஆதிப் பராபரன் எந்தை
கடந்து நின்று அவ்வழி காட்டு கின்றானே.

9

அவ்வழி காட்டும் அமரர்க்கு அரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும்
செவ்வழி சேர் சிவலோகத்து இருந்திடும்
இவ்வழி நந்தி இயல்பு அது தானே.

10

எறிவது ஞானத்து உறைவாள் உருவி
அறிவு அதனோடே அவ் ஆண் தகையானைச்
செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப்
பறிவது பல் கணப் பற்று விட்டாரே.

11

ஆதிப்பிரான் தந்த வாள் அங் கைக் கொண்டபின்
வேதித்து என்னை விலக்க வல்லார் இல்லை
சோதிப்பன் அங்கே சுவடு படா வண்ணம்
ஆதிக் கண் தெய்வம் அவன் இவன் ஆமே.

12

அந்தக் கருவை அருவை வினை செய்தல்
பந்தம் பணி அச்சம் பல் பிறப்பும் வாட்டிச்
சிந்தை திருத்தலும் சேர்ந்தார் அச்சோதனை
சந்திக்கத் தற்பரம் ஆகும் சதுரர்க்கே.