பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / பதிபசு பாசம் வேறின்மை
வ.எண் பாடல்
1

அறிவு அறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பு அறும் தான்

2

பசுபல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம் மூன்று உண்டு
பசுத் தன்மை நீக்கி அப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

3

கிடக்கின்ற வாறே கிளர் பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாள் தோறும் நோக்கித்
தொடக்கு ஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக் குன்றில் இட்ட விளக்கு அதுவாமே.

4

பாசம் செய்தானைப் படர்சடை நந்தியை
நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தலும்
கூசம் செய்துஉன்னிக் குறிக் கொள்வது எவ் வண்ணம்
வாசம் செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.

5

விட்ட விடம் ஏறா வாறு போல் வேறு ஆகி
விட்ட பசு பாச மெய் கண்டோன் மேவுறான்
கட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.

6

நாடும் பதியுடன் நல் பசு பாசமும்
நீடுமா நித்தன் நிலை அறிவார் இல்லை
நீடிய நித்தம் பசு பாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே.

7

ஆய பதிதான் அருள் சிவலிங்கம் ஆம்
ஆய பசுவும் அடலேறு என நிற்கும்
ஆய பலி பீடம் ஆகும் நல்பாசம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே.

8

பதி பசு பாசம் பயில் வியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்று அற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே.

9

பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதி தந்த ஆனந்த மா நந்தி காணும்
துதி தந்து வைத்தனன் சுத்த சைவத்திலே.

10

அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதி படைப்பான் அங்கு அவற்றையே.

11

படைப்பு ஆதி ஆவது பரம்சிவம் சத்தி
இடைப்பால் உயிர்கள் கடைத்து இவை தூங்கல்
படைப்பு ஆதி சூக்கத்தைத் தற்பரம் செய்யப்
படைப்பு ஆதி தூய மலம் அப்பரத்திலே.

12

ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவ பர மேல் ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங் கருமம் செய்வோன்
ஆகிய தூய ஈசானனும் ஆமே.

13

மேவும் பரசிவ மேல் சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம் முகன் வேறு ஈசன்
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி
ஆகும்படி படைப்போன் அரன் ஆமே

14

படைப்பும் அளிப்பும் பயில் இளைப் பாற்றும்
துடைப்பு மறைப்பு முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்து எனல் ஆமே.

15

ஆறு ஆறு குண்டலி தன்னின் அகத்து இட்டு
வேறு ஆகும் மாயையின் முப்பான் மிகுத்துஇட்டு அங்கு
ஈறு ஆம் கருவி இவற்றால் வகுத்து இட்டு
வேறு ஆம் பதி பசு பாசம் வீடு ஆகுமே.

16

வீட்கும் பதி பசு பாசமும் மீது உற
ஆட்கும் இருவினை ஆங்கு அவற்றால் உணர்ந்து
ஆட்கும் நரக சுவர்க்கத்தில் தான் இட்டு
நாட்கு உற நான் தங்கு நல் பாசம் நண்ணுமே.

17

நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண் வந்த பேர் அருள்
அண்ணல் அடிசேர் உபாயம் அது ஆகுமே.

18

ஆகும் உபாயமே அன்றி அழுக்கு அற்று
மோகம் அறச் சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கு ஏற்றி ஏற்றல் போல்
ஆகுவது எல்லாம் அருள் பாசம் ஆகுமே.

19

பாசம் பயில் உயிர் தானே பர முதல்
பாசம் பயில் உயிர் தானே பசு என்ப
பாசம் பயிலப் பதி பரம் ஆதலால்
பாசம் பயிலப் பதி பசு ஆகுமே.

20

அத்தத்தில் உத்தரம் கேட்ட அரும் தவர்
அத்தத்தில் உத்தரம் ஆகும் அருள் மேனி
அத்தத்தினாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே.