பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

வைய நிகழ் பல்லவர் தம் குலமரபின் வழித்தோன்றி
வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிச்
செய்ய சடையர் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார்;
ஐயடிகள்; நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார்.

2

திருமலியும் புகழ் விளங்கச் சேண் நிலத்தில் எவ் உயிரும்
பெருமையுடன் இனிது அமரப் பிற புலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்து ஓங்கத் தாரணிமேல் சைவமுடன்
அருமறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில்.

3

மன்னவரும் பணி செய்ய வடநூல் தென்தமிழ் முதலாம்
பன்னு கலைப் பணிசெய்யப் பார் அளிப்பார் அரசாட்சி
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழிச்சி,
நன்மை நெறித் திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார்.

4

தொண்டு உரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின் கண்
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்கள்ஆன எலாம்
கண்டு இறைஞ்சித் திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்தே
வண் தமிழின் மொழி வெண்பா ஓர் ஒன்றா வழுத்துவார்.

5

பெருத்து எழு காதலில் வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த்
திருச்சிற்றம் பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை
நிருத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி, நெடும் தகையார்
விருப்பின் உடன் செந் தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார்.

6

அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி,
இவ் உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்திச்
செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே
எவ் உலகும் புகழ்ந்து ஏத்தும் இன்தமிழ் வெண்பா மொழிந்தார்.

7

இந் நெறியால் அரன் அடியார் இன்பம் உற இசைந்த பணி
பல் நெடு நாள் ஆற்றியபின் பரமர் திருவடி நிழல் கீழ்
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார்;
கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவரை அடிகளார்.

8

பை அரவம் அணி ஆரம் அணிந்தார்க்குப் பா அணிந்த
ஐயடிகள் காடவனார் அடி இணைத்தாமரை வணங்கிக்
கை அணிமான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய
செய்தவத்துக் கணம் புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம்.

9

உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு உய்ய இருண்ட திருக்
களத்து முது குன்றர் தரு கனகம் ஆற்றினில் இட்டு
வளத்தின் மலி ஏழ் உலகும் வணங்கு பெருந்திருவாரூர்க்
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார்.