பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஏழாம் தந்திரம் / சமாதிக் கிரியை
வ.எண் பாடல்
1

அந்தம் இல் ஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடு எலாம் வெப்புறத் தீயினில்
நொந்து அது நாய் நரி நுகரின் உண் செரு
வந்து நாய் நரிக்கு உணவு ஆகும் வையகமே.

2

எண்ணிலா ஞானி உடல் எரி தாவிடில்
அண்ணல் தம் கோயில் அழல் இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணின் மழை விழா வையகம் பஞ்சம் ஆம்
எண் அரு மன்னர் இழப்பார் அரசே.

3

புண்ணியம் ஆம் அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவு ஆகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கம் ஆம்
மண் உலகு எல்லாம் மயங்கும் அனல் மண்டியே.

4

அந்தம் இல் ஞானி அருளை அடைந்தக் கால்
அந்த உடல் தான் குகை செய்து இருத்திடில்
சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும்
அந்தம் இல் இன்ப அருள் பெறுவாரே.

5

நவ மிகு சாணாலே நல் ஆழம் செய்து
குவை மிகு சூழ ஐஞ் சாண் ஆகக் கோட்டித்
தவம் மிகு குகை முக்கோண முச்சாண் ஆக்கிப்
பவம் அறு நல்குகை பத்மா சனமே

6

தன் மனை சாலை குளம் கரை ஆற்று இடை
நல் மலர்ச் சோலை நகரின் நல் பூமி
உன்னருங் கானம் உயர்ந்த மலைச் சாரல்
இந் நிலம் தான் குகைக்கு எய்தும் இடங்களே.

7

நல் குகை நால் வட்டம் பஞ்சாங்க பாதம் ஆய்
நிற்கின்ற பாத நவ பாத நேர்விழப்
பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்று அணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மை அது ஆமே.

8

பஞ்ச லோகங்கள் நவ மணி பாரித்து
விஞ்சப் படுத்த தன் மேல் ஆசனம் இட்டு
முஞ்சி படுத்து வெண் நீறு இட்டு அதன் மேலே
பொன் செய்த நல் சுண்ணம் பொதியலும் ஆமே.

9

நள் குகை நால் வட்டம் படுத்த தன்மேல் சாரக்
கள் அவிழ் தாமம் களபம் கத்தூரியும்
தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்து இடு வீரே.

10

ஓதிடும் வெண் நீற்றால் உத் தூள் அம் குப்பாய
மீதினில் இட்ட ஆசனத்தின் மேல் வைத்துப்
போது அறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடு வீரே.

11

விரித்த பின்னால் சாரு மேவுதல் செய்து
பொரித்த கறி போனகம் இள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழை முகம் பார்வை
தரித்த பின் மேல் வட்டம் சாத்திடுவீரே.

12

மீது சொரிந்திடும் வெண் நீறும் சுண்ணமும்
போது பல கொண்டு தர்ப்பைப் புல் வில்வமும்
பாத உகத்தான் மஞ்சனம் செய்து பார்
மீது மூன்றுக்கு மூன்று அணி நிலம் செய்யுமே.

13

ஆதனம் மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம் பூர்வம்
காதலில் சோடசம் காண் உப சாரமே.