பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு தாள் தந்து தன்னை அறியத் தர வல்லோன் தாள் தந்து தத்துவா தீதத்துச் சார் சீவன் தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே.
தவிர வைத்தான் வினை தன் அடியார் கோள் தவிர வைத்தான் சிரத்தோடு தன் பாதம் தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம் தவிர வைத்தான் பிறவித் துயர் தானே.
கறுத்த இரும்பே கனகம் அது ஆனால் மறித்து இரும்பு ஆகா வகை அது போலக் குறித்த அப்போதே குரு அருள் பெற்றால் மறித்துப் பிறவியில் வந்து அணுகானே.
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும் நேசத்து நாடி மலம் அற நீக்கு வோர் ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்றுப் பூசற்கு இரங்குவோர் போதக் குரு அன்றே.
நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே.
பரிசன வேதி பரிசித்தது எல்லாம் வரிசைதரும் பொன் வகை ஆகும் மா போல் குரு பரிசித்த குவலயம் எல்லாம் திரி மலம் தீர்ந்து சிவகதி ஆமே.
தானே என நின்ற சற்குரு சந்நிதி தானே என நின்ற தன்மை வெளிப்படில் தானே தனைப் பெற வேண்டும் சதுர் பெற ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே.
வரும் வழி போம் வழி மாயா வழியைக் கருவழி கண்டவர் காணா வழியைப் பெரும் வழியா நந்தி பேசும் வழியைக் குரு வழியே சென்று கூடலும் ஆமே.
குரு என்பவனே வேத ஆகமம் கூறும் பர இன்பன் ஆகிச் சிவயோகம் பாவித்து ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி வரு நல் குரவன் பால் வைக்கலும் ஆமே.
சத்தும் அசத்தும் சத சத்தும் தான் காட்டிச் சித்தும் அசித்தும் சிவ பரத்தே சேர்த்துச் சுத்தம் அசுத்தம் அறச் சுகம் ஆன சொல் அத்தன் அருள் குருவாம் அவன் கூறிலே.
உற்றிடும் ஐம் மலம் பாச உணர்வினால் பற்று அறு நாதன் அடியில் பணிதலால் சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டித் தற்பரம் மேவும் ஓர் சாதகர் ஆமே.
எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம் வல்லார் புலனும் வரும்கால் உயிர் தோன்றிச் சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே செல்லாச் சிவ கதி சேர்தல் விளையாட்டே.
ஈனப் பிறவியில் இட்டது மீட்டு ஊட்டித் தானத்துள் இட்டுத் தனை ஊட்டித் தாழ்த்தலும் ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுஉற்று மோனத்துள் வைத்தலும் முத்தன் தன் செய்கையே.
அத்தன் அருளின் விளையாட்டு இடம் சடம் சித்தொடு சித்து அறத் தெளிவித்த சீவனைச் சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச் சத்துடன் ஐம் கருமத்து இடும் தன்மையே.
ஈ சத்துவம் கடந்து இல்லை என்று அப்புறம் பாசத்து உள்ளே என்றும் பாவியும் அண்ணலை நேசத்து உள்ளே நின்ற நின் மலன் எம் இறை தேசத்தை எல்லாம் தெளிய வைத்தானே.
மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம் ஆணிப் பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது பேணிக் கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள் ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே.
அசத்தொடு சத்தும் அசத்து சத்து நீங்க இசைத்திடு பாசப் பற்று ஈங்கு அறு மாறே அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே இசைத் தானும் ஒன்று அறிவிப்போன் இறையே.
ஏறு நெறியே மலத்தை எரித்தல் ஆல் ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால் மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக கூறு பரனே குரு வாம் இயம்பிலே.