பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஏழு வளைகடல் எட்டுக் குலவரை ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி தாழும் இருநிலத் தன்மை யதுகண்டு வாழ நினைக்கில் அஃ(து) ஆலயம் ஆமே.
ஆலிங் கனம்செய்(து) அகம்சுடச் சூலத்துச் சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர் கோலிங் கமைந்தபின் கூபப் பறவைகள் மாலிங்கு வைத்தது முன்பின் வழியே.
நின்றார் இருந்தார் கிடந்தார் என இல்லை சென்றார் தம் சித்த மோன சமாதி மன்றேயும் அங்கே மறைப் பொருள் ஒன்று சென்று ஆங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே.
காட்டும் குறியும் கடந்தவர் காரணம் ஏற்றின் புறத்தில் எழுதி வைத்து என் பயன் கூட்டும் குரு நந்தி கூட்டிடின் அல்லது ஆட்டின் கழுத்தில் அதர் கிடந்து அற்றே.
உணர்வு உடையார் கட்கு உலகமும் தோன்றும் உணர்வு உடையார் கட்கு உறுதுயர் இல்லை உணர்வு உடையார்கள் உணர்ந்த அக்காலம் உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே.
மறப்ப அதுவாய் நின்ற மாய நல் நாடன் பிறப்பினை நீங்கிய பேர் அருளாளன் சிறப்பு உடையான் திரு மங்கையும் தானும் உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே.
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி அரிய துரியம் அதில் மீது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே உரை இல் அநுபூதிகத்து உள்ளானே.
உருவு இலி ஊன் இலி ஊனம் ஒன்று இல்லி திரு இலி தீது இலி தேவர்க்குத் தேவன் பொருஇலி பூதப் படை உடையாளி மரு இலி வந்து என் மனம் புகுந்தானே.
கண்டு அறிவார் இல்லைக் காயத்தின் நந்தியை எண் திசை யோரும் இறைவன் என்று ஏத்துவர் அண்டம் கடந்த அளவு இலா ஆனந்தத் தொண்டர் முகந்த துறை அறியோமே.
தற்பரம் அல்ல சதாசிவன் தான் அல்ல நிட்களம் அல்ல சகள நிலை அல்ல அற்புதம் ஆகி அநுபோகக் காமம் போல் கற்பனை இன்றிக் கலந்து நின்றானே.
முகத்தில் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்தில் கண் கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல் என்றால் சொல்லும் ஆறு எங்ஙனே.
அப்பினில் உப்பு என அத்தன் அணைந்திட்டுச் செப்பு பரா பரம் சேர் பரமும் விட்டுக் கப்புறு சொற்பதம் ஆளக் கலந்தமை எப்படி அப்படி என்னும் அவ்வாறே.
கண்டார்க்கு அழகு இது காஞ்சிரத்தின் பழம் தின்றார்க்கு அறியலாம் அப்பழத்தின் சுவை பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால் கொண்டான் அறிவன் குணம் பல தானே.
நந்தி இருந்தான் நடுவுள் தெருவிலே சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன உந்தியின் உள்ளே உதித்து எழும் சோதியைப் புந்தியினாலே புணர்ந்து கொண்டேனே.
விதறு படா வண்ணம் வேறு இருந்து ஆய்ந்து பதறு படாதே பழ மறை பார்த்துக் கதறிய பாழைக் கடந்த அந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்கு கின்றேனே.
வாடா மலர் புனை சேவடி வானவர் கூடார் அற நெறி நாள்தொறும் இன்பு உறச் சேடார் கமலச் செழும் சுடருள் சென்று நாடார் அமுது உற நாடார் அமுதமே.
அதுக்கு என்று இருவர் அமர்ந்த சொல் கேட்டும் பொதுக்கு எனக் காமம் புலப்படு மா போல் சதுக்கு என்று வேறே சமைந்தாரைக் காண மதுக் கொன்றைத் தாரான் வளம் தரும் அன்றே.
தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு ஊனும் அழிந்து உயிரும் அழிந்து உடன் வானும் அழிந்து மனமும் அழிந்து பின் நானும் அழிந்தமை நான் அறியேனே.
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் பொருளில் பொருளாய்ப் பொருந்த உள் ஆகி அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே உருளாத கல் மனம் உற்று நின்றேனே.
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம் ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை ஒன்றி நின்றே பல ஊழி கண்டேனே.