பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மண் ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண் என்று இருந்தது தீவினை சேர்ந்தது விண் நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல் எண் இன்றி மாந்தர் இறக்கின்ற வாறே.
பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின் செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநடவாதே.
ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரிரை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டுச் சூரை அம் காட்டு இடைக் கொண்டு போய் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார் களே.
காலும் இரண்டு முகட்டு அலக் கென்று உள பாலுள் பரும் கழி முப்பத்து இரண்டு உள மேல் உள கூரை பிரியும் பிரிந்தால் முன் போல் உயிர் மீளப் புக அறியாதே.
சீக்கை விளைந்தது செய்வினை முட்டு இற்ற ஆக்கை பிரிந்த அலகு பழுத்தது மூக்கினில் கைவைத்து மூடு இட்டுக் கொண்டுபோய்க் காக்கைக்குப் பலி காட்டிய வாறே.
அடப் பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக் கொடியா ரொடு மந்தணம் கொண்டார் இடப் பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே.
மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது மன்றத்தே நம்பி சிவிகை பெற்று ஏறினான் மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான் சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே.
வாசந்தி பேசி மணம் புணர்ந்த அப்பதி நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை ஆ சந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டுப் பாசம் தீ சுட்டுப் பலி அட்டினார்களே.
கைவிட்டு நாடிக் கருத்து அழிந்து அச்சற நெய் அட்டிச் சோறு உண்ணும் ஐவரும் போயினார் மை இட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே மெய் விட்டுப் போக விடை கொள்ளும் ஆறே.
பந்தல் பிரிந்தது பண்டாரம் கட்டு அற்ற ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன துன்புறு காலம் துரிசுவர மேல் மேல் அன்பு உடையார்கள் அழுது அகன்றார் களே.
நாட்டுக்கு நாயகன் நம் ஊர்த் தலைமகன் காட்டுச் சிவிகை ஒன்று ஏறிக் கடைமுறை நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.
முப்பதும் முப்பதும் முப்பத்து அறுவரும் செப்ப மதிள் உடைக் கோயிலுள் வாழ்பவர் செப்ப மதிள் உடைக் கோயில் சிதைந்த பின் ஒப்ப அனைவரும் ஓட்டு எடுத்தார் களே.
மது ஊர் குழலியும் மாடும் மனையும் இது ஊர் ஒழிய இதணம் அது ஏறிப் பொது ஊர் புறம் சுடு காடு அது நோக்கி மது ஊர வாங்கியே வைத்து அகன்றார்களே.
வைச்ச அகல் உற்றது கண்டு மனிதர்கள் அச்ச அகலாது என நாடும் அரும்பொருள் பிச்சது வாய்ப்பின் தொடர் உறு மற்றவர் எச்ச அகலா நின்று இளைக்கின்ற வாறே.
ஆர்த்து எழும் சுற்றமும் பெண்டிரும் மக்களும் ஊர்த் துறைக் காலே ஒழிவர் ஒழிந்த பின் வேர்த் தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி நீர்த் தலை மூழ்குவர் நீதி இலோரே.
வளத்து இடை முற்றத் தோர் மா நிலம் முற்றும் குளத்தின் மண் கொண்டு குயவன் வனைந்தான் குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பர் உடல் உடைந்தால் இறைப் போதும் வையாரே.
ஐந்து தலைப் பறி ஆறு சடை உள சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப் பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து வெந்து கிடந்தது மேல் அறியோமே.
அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும் கொத்தி உலைப் பெய்து கூழ் அட்டு வைத்தனர் அத்திப் பழத்தை அறைக் கீரை வித்து உண்ணக் கத்தி எடுத்தவர் காடுபுக்காரே.
மேலும் முகடு இல்லை கீழும் வடிம்பு இல்லை காலும் இரண்டு முகட்டு அலக் கொன்று உண்டு ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை வேலையான் மேய்ந்தது ஓர் வெள்ளித் தளிகையே.
கூடம் கிடந்தது கோலங்கள் இங்கு இல்லை ஆடும் இலையமும் அற்றது அறுதலும் பாடுகின்றார் சிலர் பண்ணில் அழுத்தி இட்டுத் தேடிய தீயினில் தீய வைத்தார்களே.
முட்டை பிறந்தது முந்நூறு நாளினில் இட்டது தான் இலை ஏதேனும் ஏழைகாள் பட்டது பார் மணம் பன்னிரண்டு ஆண்டினில் கெட்டது எழு பதில் கேடு அறியீரே.
இடிஞ்சி இல் இருக்க விளக்கு எரி கொண்டான் முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர் விடிஞ்சி இருளாவது அறியா உலகம் படிஞ்சு கிடந்தது பதைக்கின்ற வாறே.
மடல் விரி கொன்றையான் மாயன் படைத்த உடலும் உயிரும் உருவம் தொழாமல் இடர் படர்ந்து ஏழா நரகில் கிடப்பர் குடர் பட வெம் தமர் கூப்பிடும் ஆறே.
குடையும் குதிரையும் கொற்ற வாளும் கொண்டு இடையும் அக்காலம் இருந்து நடுவே புடையும் மனிதனார் போகும் அப்போதே அடையும் இடம் வலம் ஆர் உயிர் ஆமே.
காக்கை கவரில் என் கண்டார் பழிக்கில் என் பால் துளி பெய்யில் என் பல்லோர் பழிச்சில் என் தோல் பையுள் நின்று தொழில் அறச் செய்து ஊட்டும் கூத்தன் புறப்பட்டுப் போன இக் கூட்டையே.