பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / படைத்தல்
வ.எண் பாடல்
1

ஆதியோடு அந்தம் இலாத பரா பரம்
போதம் அது ஆகப் புணரும் பராபரை
சோதி அதனில் பரம் தோன்றத் தோன்றுமாம்
தீதுஇல் பரை அதன் பால் திகழ் நாதமே.

2

நாதத்தில் விந்துவும் நாத விந்துக் களில்
தீது அற்று அகம்வந்த சிவன் சத்தி என்னவே
பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்து எழும் விந்துவே.

3

இல்லது சத்தி இடம் தனில் உண்டாகிக்
கல் ஒளி போலக் கலந்து உள் இருந்திடும்
வல்லது ஆக வழி செய்த அப் பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.

4

தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய்
பாரச் சதா சிவம் பார் முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்தி ஓர் சாத்தும் ஆனாமே.

5

மானின் கண் வான் ஆகி வாயு வளர்ந்திடும்
கானின் கண் நீரும் கலந்து கடினமாய்த்
தேனின் கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்ப்
பூவின் கண் நின்று பொருந்தும் புவனமே.

6

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப் பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப் பானும் பூமிசையான் ஆய்
புவனம் படைப்பான் அப்புண்ணியன் தானே.

7

புண்ணியன் நந்தி பொருந்தி உலகு எங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும்
கண் இயல் பாகக் கலவி முழுதும் ஆய்
மண் இயல் பாக மலர்ந்து எழு பூவிலே.

8

நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பு இடை
காயத்தில் சோதி பிறக்கும் அக் காற்று இடை
ஓர் உடை நல் உயிர்ப் பாதம் ஒலி சத்தி
நீர் இடை மண்ணின் நிலைப் பிறப்பு ஆமே.

9

உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன் ஆகி
அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டு இவ் உலகம் படைக்கும் பொருளே.

10

ஓங்கு பெரும் கடல் உள் உறு வானொடும்
பாங்கர் கயிலைப் பராபரன் தானும்
வீங்கும் கமல மலர்மிசை மேல் அயன்
ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே.

11

காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும்
பாரணன் அன்பில் பதம் செய்யும் நான்முகன்
ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே.

12

பயன் எளிது ஆம் பரு மா மணி செய்ய
நயன் எளிது ஆகிய நம்பன் ஒன்று உண்டு
அயன் ஒளியாய் இருந்து அங்கே படைக்கும்
பயன் எளிதாம் வயணம் தெளிந்தேனே.

13

போக்கும் வரவும் புனிதன் அருள் புரிந்து
ஆக்கமும் சிந்தை அது ஆகின்ற காலத்து
மேக்கு மிக நின்ற எட்டுத் திசை யொடும்
தாக்கும் கலக்கும் தயா பரன் தானே.

14

நின்று உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர்
ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடல் உற
முன்துயர் ஆக்கும் உடற்கும் துணை அதா
நன்று உயிர்ப் பானே நடுவு நின்றானே.

15

ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம் பொனின் மேல் அணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன்
ஆகின்ற தன்மை செய் ஆண் தகை யானே.

16

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன் பல ஆன
திரு ஒன்றில் செய்கை செகம் முற்றும் ஆமே.

17

புகுந்து அறிவான் புவனா பதி அண்ணல்
புகுந்து அறிவான் புரி சக்கரத்து அண்ணல்
புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள்
புகுந்து அறியும் முடிக்கு ஆகி நின்றாரே.

18

ஆணவச் சத்தியும் ஆம் அதில் ஐவரும்
காரிய காரண ஈசர் கடை முறை
பேணிய ஐந் தொழிலால் விந்துவில் பிறந்து
ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே.

19

உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதய மா
மற்றைய மூன்று மாயோதயம் விந்து
பெற்றவன் நாதம் பரையில் பிறந்ததால்
துற்ற பரசிவன் தொல் விளையாட்டு இதே.

20

ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என்
போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன் மால் பிரமன் ஆம்
ஆகாயம் பூமி காண அளித்தலே.

21

அளியார் முக்கோணம் வயிந்தவம் தன்னில்
அளியார் திரிபுரை ஆம் அவள் தானே
அளியார் சதா சிவம் ஆகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்து செய்வாளே.

22

வார் அணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரியம் ஆகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமும் ஆமே.

23

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன்
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன்
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே.

24

ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான்
ஒருவனுமே உலகு ஏழும் அளித்தான்
ஒருவனுமே உலகு ஏழும் துடைத்தான்
ஒருவனுமே உலகோடு உயிர் தானே.

25

செந்தாமரை வண்ணன் தீ வண்ணன் எம் இறை
மைந்தார் முகில் வண்ணன் மாயம் செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
அந்தார் பிறவி அறுத்து நின்றானே.

26

தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடும் பிறவிக் குணம் செய்த மா நந்தி
ஊடும் அவர் தமது உள்ளத்துள்ளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே.

27

ஓராய மே உலகு ஏழும் படைப்பதும்
ஓராய மே உலகு ஏழும் அளிப்பதும்
ஓராய மே உலகு ஏழும் துடைப்பதும்
ஓராய மே உலகோடு உயிர்தானே.

28

நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடும் கூட்டிக் குழைத்தனர்
ஏதுபணி என்று இசையும் இருவருக்கு
ஆதி இவனே அருளுகின்றானே.

29

அப்பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம்
மெய்ப் பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும்
பொய்ப் பரிசு எய்திப் புகலும் மனிதர் கட்கு
இப்பரிசே இருள் மூடி நின்றானே.

30

ஆதித்தன் சந்திரன் அங்கி எண் பாலர்கள்
போதித்த வான் ஒலி பொங்கிய நீர் புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.