பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பகர்ந்து உலகு சீர் போற்றும் பழைய வளம் பதியாகும் திகழ்ந்த புனல் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால் முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் கையேற்கும் அகன் பணை நீர் நல் நாட்டு மேற் காதாட்டு ஆதனூர்.
நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின் சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழப் பகட்டு ஏர் ஆற்று அலவன் கொழுக் கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறிச் சேற்று அலவன் கரு உயிர்க்க முருகு உயிர்க்கும் செழுங்கமலம்.
நனை மருவும் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில் தினகர மண்டலம் வருடும் செழும் தருவின் குலம் பெருகிக் கனம் மருவி அசைந்து அலையக் களி வண்டு புடை சூழப் புனல் மழையோ மது மழையோ பொழிவு ஒழியா பூஞ்சோலை.
பாளை விரி மணம் கமழும் பைங் காய் வன் குலைத் தெங்கின் தாள் அதிர மிசை முட்டித் தடம் கிடங்கின் எழப்பாய்ந்த வாளை புதையச் சொரிந்த பழம் மிதப்ப வண் பலவின் நீளம் முதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும்.
வயல் வளமும் செயல் படு பைந் துடவை இடை வரும் வளமும் வியல் இடம் எங்கணும் நிறைய மிக்க பெருந்திருவின ஆம் புயல் அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய் அயல் இடை வேறு அடி நெருங்கக் குடி நெருங்கி உளது அவ்வூர்.
மற்று அவ் ஊர்ப் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில் சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளை துவன்றிப் பற்றிய பைங்கொடிச் சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடைப் புல் குரம்பைச் சிற்றில் பல நிறைந்து உளது ஓர் புலைப்பாடி.
கூர் உகிர் மெல் அடி அலகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும் வார் பயில் முன்றிலில் நின்ற வள் உகிர் நாய்த் துள்ளு பறழ் கார் இரும்பின் சரி செறிகைக் கரும் சிறார் கவர்ந்து ஓட ஆர் சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி.
வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும் தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசிப் புதை நீழல் மென் சினைய வஞ்சிகளும் விசிப் பறை தூங்கு இன மாவும் புன் தலை நாய்ப் புனிற்று முழைப் புடைத்து எங்கும் உடைத்து எங்கும்.
செறி வலித் திண் கடைஞர் வினைச் செயல்புரிவை கறை யாமக் குறி அளக்க உளைக்கும் செங் குடுமி வாரணச் சேக்கை வெறி மலர்த் திண் சினைக் காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம் நெறி குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும்.
புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கை உடைப் புடை எங்கும் தள்ளும் தாள் நடை அசையத் தளை அவிழ் பூங்குவளை மது விள்ளும் பைங்குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள் கள் உண்டு களி தூங்கக் கறங்கு பறையும் கலிக்கும்.
இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார் மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வு ஒடும் வந்தார் அப்பதியில் ஊர்ப் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார் ஒப்பு இலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார்.
பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக் கண்ணிப் பெருந்தகைபால் சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய் மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார்.
ஊரில் விடும் பறைத் துடவை உணவு உரிமையாக் கொண்டு சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால் கூர் இலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும் பேரிகையே முதல் ஆய முகக் கருவி பிறவினுக்கும்.
போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில் சேர் உற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்கு ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார்.
இவ் வகையால் தம் தொழிலின் இயன்ற வெலாம் எவ்விடத்தும் செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று மெய் விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும் அவ் இயல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில்.
திருப் புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து விருப்பினொடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும் வருத்தம் உறும் காதலினால் வந்து அவ்வூர் மருங்கு அணைந்தார்.
சீர் ஏறும் இசை பாடித் திருத் தொண்டர் திரு வாயில் நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார் கார் ஏறும் எயில் புன் கூர்க் கண் நுதலார் திரு முன்பு போர் ஏற்றை விலங்க அருள் புரிந்து அருளிப் புலப்படுத்தார்.
சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன் நின்று பவ லோகம் கடப்பவர் தம் பணிவிட்டுப் பணிந்து எழுந்து சுவல் ஓடுவார் அலையப் போவார் பின்பு ஒரு சூழல் அவ லோடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டார்.
வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திரு அருளால் தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதற்பின் தம் பெருமான் இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்து எழுந்து நடம் கொண்டு விடை கொண்டு தம் பதியில் நண்ணினார்.
இத் தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி மெய்த் திருத் தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த சித்தம் ஒடும் திருத் தில்லைத் திரு மன்று சென்று இறைஞ்ச உய்த்த பெரும் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப.
அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதன்பின் அங்கு எய்த ஒன்றி அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை என்று இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கு ஒழிவார் நன்று எழும் காதல் மிக நாளைப் போவேன் என்பார்.
நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்ப் பாளைப் பூங்கமுகு உடுத்த பழம் பதியின் நின்றும் போய் வாளைப் போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார்.
செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்து பல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும் மல்கு பெரும் இடை ஓதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்.
நின்றவர் அங்கு எய்து அரிய பெருமையினை நினைப்பார் முன் சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலைப் புக்கார் குன்று அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள் ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள்.
இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி அப்பதியின் மதில் புறத்தின் ஆராத பெருங் காதல் ஒப்ப அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகிக் கை தொழுதே செப்ப அரிய திரு எல்லை வலங் கொண்டு செல்கின்றார்.
இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய அவ் வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்தி மை வண்ணத் திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது எவ் வண்ணம் என நினைந்தே ஏசறவின் ஒடும் துயில்வார்.
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார் அந் நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி மன்னு திருத் தொண்டர் அவர் வருத்தம் எலாம் தீர்ப்பதற்கு முன் அணைந்து கனவின் கண் முறுவல் ஒடும் அருள் செய்வார்.
இப் பிறவி போய் நீங்க எரியின் இடை நீ மூழ்கி முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து அப் பரிசே தில்லை வாழ் அந்தணர்க்கும் எரி அமைக்க மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்.
தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும் அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி எம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம் என்று ஏத்தித் தம் பரிவு பெருக வரும் திருத் தொண்டர் பால் சார்ந்தார்.
ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம் வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப நையும் மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார் தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார்.
மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்துப் பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம் நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழல் வலம் கொண்டார்.
கை தொழுது நடம் ஆடும் கழல் உன்னி அழல் புக்கார் எய்திய அப் பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப் பொய் தகையும் உருவு ஒழித்துப் புண்ணிய மா முனி வடிவாய் மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார்.
செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம் வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப் பைந் துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார்.
திரு உடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார் பரவு அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார் அரு மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க வருகின்றார் திரு நாளைப் போவாராம் மறை முனிவர்.
தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக் கொல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும் எல்லையினைத் தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலர் ஆல்.
அந்தணர்கள் அதிசயித்தார் அருமுனிவர் துதி செய்தார் வந்து அணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்துச் சுந்தரத் தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க அந்தம் இலா ஆனந்தப் பெருங்கூத்தர் அருள் புரிந்தார்.
மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து ஆசுஇல் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார் தேசு உடைய கழல் வாழ்த்தித் திருக் குறிப்புத் தொண்டவினைப் பாசம் அற முயன்றவர்தம் திருத் தொண்டின் பரிசு உரைப்பாம்.