பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருநாளைப்போவார் நாயனார் புராணம்
வ.எண் பாடல்
001

பகர்ந்து உலகு சீர் போற்றும் பழைய வளம் பதியாகும்
திகழ்ந்த புனல் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால்
முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் கையேற்கும்
அகன் பணை நீர் நல் நாட்டு மேற் காதாட்டு ஆதனூர்.

002

நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின்
சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழப் பகட்டு ஏர்
ஆற்று அலவன் கொழுக் கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறிச்
சேற்று அலவன் கரு உயிர்க்க முருகு உயிர்க்கும் செழுங்கமலம்.

003

நனை மருவும் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில்
தினகர மண்டலம் வருடும் செழும் தருவின் குலம் பெருகிக்
கனம் மருவி அசைந்து அலையக் களி வண்டு புடை சூழப்
புனல் மழையோ மது மழையோ பொழிவு ஒழியா பூஞ்சோலை.

004

பாளை விரி மணம் கமழும் பைங் காய் வன் குலைத் தெங்கின்
தாள் அதிர மிசை முட்டித் தடம் கிடங்கின் எழப்பாய்ந்த
வாளை புதையச் சொரிந்த பழம் மிதப்ப வண் பலவின்
நீளம் முதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும்.

005

வயல் வளமும் செயல் படு பைந் துடவை இடை வரும் வளமும்
வியல் இடம் எங்கணும் நிறைய மிக்க பெருந்திருவின ஆம்
புயல் அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய்
அயல் இடை வேறு அடி நெருங்கக் குடி நெருங்கி உளது அவ்வூர்.

006

மற்று அவ் ஊர்ப் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில்
சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளை துவன்றிப்
பற்றிய பைங்கொடிச் சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடைப்
புல் குரம்பைச் சிற்றில் பல நிறைந்து உளது ஓர் புலைப்பாடி.

007

கூர் உகிர் மெல் அடி அலகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும்
வார் பயில் முன்றிலில் நின்ற வள் உகிர் நாய்த் துள்ளு பறழ்
கார் இரும்பின் சரி செறிகைக் கரும் சிறார் கவர்ந்து ஓட
ஆர் சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி.

008

வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும்
தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசிப் புதை நீழல்
மென் சினைய வஞ்சிகளும் விசிப் பறை தூங்கு இன மாவும்
புன் தலை நாய்ப் புனிற்று முழைப் புடைத்து எங்கும் உடைத்து எங்கும்.

009

செறி வலித் திண் கடைஞர் வினைச் செயல்புரிவை கறை யாமக்
குறி அளக்க உளைக்கும் செங் குடுமி வாரணச் சேக்கை
வெறி மலர்த் திண் சினைக் காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம்
நெறி குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும்.

010

புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கை உடைப் புடை எங்கும்
தள்ளும் தாள் நடை அசையத் தளை அவிழ் பூங்குவளை மது
விள்ளும் பைங்குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள்
கள் உண்டு களி தூங்கக் கறங்கு பறையும் கலிக்கும்.

011

இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வு ஒடும் வந்தார்
அப்பதியில் ஊர்ப் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்
ஒப்பு இலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார்.

012

பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக் கண்ணிப் பெருந்தகைபால்
சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய்
மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த
அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார்.

013

ஊரில் விடும் பறைத் துடவை உணவு உரிமையாக் கொண்டு
சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூர் இலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும்
பேரிகையே முதல் ஆய முகக் கருவி பிறவினுக்கும்.

014

போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை
நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில்
சேர் உற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்கு
ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார்.

015

இவ் வகையால் தம் தொழிலின் இயன்ற வெலாம் எவ்விடத்தும்
செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று
மெய் விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும்
அவ் இயல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில்.

016

திருப் புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து
விருப்பினொடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும்
வருத்தம் உறும் காதலினால் வந்து அவ்வூர் மருங்கு அணைந்தார்.

017

சீர் ஏறும் இசை பாடித் திருத் தொண்டர் திரு வாயில்
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார்
கார் ஏறும் எயில் புன் கூர்க் கண் நுதலார் திரு முன்பு
போர் ஏற்றை விலங்க அருள் புரிந்து அருளிப் புலப்படுத்தார்.

018

சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன் நின்று
பவ லோகம் கடப்பவர் தம் பணிவிட்டுப் பணிந்து எழுந்து
சுவல் ஓடுவார் அலையப் போவார் பின்பு ஒரு சூழல்
அவ லோடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டார்.

019

வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திரு அருளால்
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதற்பின் தம் பெருமான்
இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்து எழுந்து
நடம் கொண்டு விடை கொண்டு தம் பதியில் நண்ணினார்.

020

இத் தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி
மெய்த் திருத் தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த
சித்தம் ஒடும் திருத் தில்லைத் திரு மன்று சென்று இறைஞ்ச
உய்த்த பெரும் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப.

021

அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதன்பின் அங்கு எய்த
ஒன்றி அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை
என்று இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கு ஒழிவார்
நன்று எழும் காதல் மிக நாளைப் போவேன் என்பார்.

022

நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்ப்
பாளைப் பூங்கமுகு உடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார்.

023

செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்து
பல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெரும் இடை ஓதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு
அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்.

024

நின்றவர் அங்கு எய்து அரிய பெருமையினை நினைப்பார் முன்
சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலைப் புக்கார்
குன்று அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள்
ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள்.

025

இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி
அப்பதியின் மதில் புறத்தின் ஆராத பெருங் காதல்
ஒப்ப அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகிக் கை தொழுதே
செப்ப அரிய திரு எல்லை வலங் கொண்டு செல்கின்றார்.

026

இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய
அவ் வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்தி
மை வண்ணத் திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது
எவ் வண்ணம் என நினைந்தே ஏசறவின் ஒடும் துயில்வார்.

027

இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார்
அந் நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி
மன்னு திருத் தொண்டர் அவர் வருத்தம் எலாம் தீர்ப்பதற்கு
முன் அணைந்து கனவின் கண் முறுவல் ஒடும் அருள் செய்வார்.

028

இப் பிறவி போய் நீங்க எரியின் இடை நீ மூழ்கி
முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து
அப் பரிசே தில்லை வாழ் அந்தணர்க்கும் எரி அமைக்க
மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்.

029

தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி
எம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம் என்று ஏத்தித்
தம் பரிவு பெருக வரும் திருத் தொண்டர் பால் சார்ந்தார்.

030

ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம்
வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப
நையும் மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார்
தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார்.

031

மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்துப்
பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம்
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி
இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழல் வலம் கொண்டார்.

032

கை தொழுது நடம் ஆடும் கழல் உன்னி அழல் புக்கார்
எய்திய அப் பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப்
பொய் தகையும் உருவு ஒழித்துப் புண்ணிய மா முனி வடிவாய்
மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார்.

033

செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த
அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம்
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப்
பைந் துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார்.

034

திரு உடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார்
பரவு அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்
அரு மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க
வருகின்றார் திரு நாளைப் போவாராம் மறை முனிவர்.

035

தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக்
கொல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும்
எல்லையினைத் தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலர் ஆல்.

036

அந்தணர்கள் அதிசயித்தார் அருமுனிவர் துதி செய்தார்
வந்து அணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்துச்
சுந்தரத் தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க
அந்தம் இலா ஆனந்தப் பெருங்கூத்தர் அருள் புரிந்தார்.

037

மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து
ஆசுஇல் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார்
தேசு உடைய கழல் வாழ்த்தித் திருக் குறிப்புத் தொண்டவினைப்
பாசம் அற முயன்றவர்தம் திருத் தொண்டின் பரிசு உரைப்பாம்.