ஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவி
ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகைத்
தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
ஒவநூல் செம்மைப் பூவியல் வீதிக்
5
குயிலென மொழியும் மயிலியல் சாயல்
மான்மாற விழிக்கும் மானார் செல்வத்(து)
இடைமரு திடங்கொண் டிருந்தஎந்தை
சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல்
ஆரணந் தொடராப் பூரணபுராண
10 நாராணன் அறியாக் காரணக் கடவுள்
சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள்
ஏக நாயக யோக நாயக
யானொன் றுணர்த்துவ துளதே யான்முன்
நனந்தலை யுலகத் தனந்த யோனியில்
15
பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழலுழித்
தோற்றும்பொழுதின் ஈற்றுத் துன்பத்(து)
யாயுறு துயரமும் யானுறு துயரும்
இறக்கும் பொழுதில் அறப்பெருந் துன்பமும்
நீயல தறிகுநர் யாரே?அதனால்
20
யானினிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்(று)
உற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது
பிறிதொரு நெறியின் இல்லையந் நெறிக்கு
வேண்டலும் வெறுத்தலும் ஆண்டொன்றற் படரா
உள்ளமொன் றுடைமைவேண்டும் அஃதன்றி
25
ஐம்புலன்ஏவல் ஆணைவழி நின்று
தானல தொன்றைத் தானென நினையும்
இதுவென துள்ளம் ஆதலின் இதுகொடு
நின்னை நினைப்ப தெங்ஙனம் முன்னம்
கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர்
30
எற்பிற ருளரோ இறைவ; கற்பம்
கடத்தல்யான் பெறவும் வேண்டும் கடத்தற்கு
நினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு
நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதி
உரையெயிற் றுரகம் பூண்ட
35
கறைகெழுமிடற்றெங் கண்ணுத லோயே.