அன்றினர் புரங்கள் அழலிடை அவியக்
குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றத்து
நுண்பொடி அணிந்த எண்தோள் செல்வ
கயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள்
5
பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமில்
பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக
சிமையச் செங்கோட் டிமையச் செல்வன்
மணியெனப் பெற்ற அணியியல் அன்னம்
வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை
10
குயிலெனப் பேசும் மயிலிளம் பேடை
கதிரொளி நீலங் கமலத்து மலர்ந்தன்ன
மதரரி நெடுங்கண் மானின் கன்று
வருமுலை தாங்குந் திருமார்பு வல்லி
வையம் ஏழும் பன்முறை ஈன்ற
15
ஐய திருவயிற் றம்மைப் பிராட்டி
மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி
எமையா ளுடைய உமையாள் நங்கை
கடவுட் கற்பின் மடவரல் கொழுந
பவள மால்வரைப் பனைக்கைபோந் தனைய
20
தழைசெவி எண்தோள் தலைவன் தந்தை
பூவலர் குடுமிச் சேவலம் பதாகை
மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல்
அமரர்த் தாங்குங் குமரன் தாதை
பொருதிடம் பொன்னி புண்ணியம் புரக்கும்
25
மருதிடங் கொண்ட மருத வாண
நின்னது குற்றம் உளதோ நின்னினைந்(து)
எண்ணருங் கோடி இடர்ப்பகை களைந்து
கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு
30
தேவர் ஆவின் கன்றெனத் திரியாப்
பாவிகள் தமதே பாவம் யாதெனின்
முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த
அறுசுவை யடிசில் அட்டினி திருப்பப்
புசியா தொருவன் பசியால் வருந்துதல்
35
அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத்(து)
ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப
மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை
தெண்ணீர்க் குற்றம் அன்றுகண் ணகன்று
தேன்துளி சிதறிப் பூந்துணர் துறுமி
40
வாலுகங் கிடந்த சோலை கிடப்பு
வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப
அடியெர்த் திடுவான் ஒருவன்
நெடிது வருந்துதல் நிழல்தீங் கன்றே.