பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஆறாம் தந்திரம் / சிவகுரு தரிசனம்
வ.எண் பாடல்
1

பத்திப் பணித்துப் பரவும் அடி நல்கிச்
சுத்த உரையால் துரிசு அறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சத சத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு ஆமே

2

பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசித்த காயம் விடிவித்து நேர் நேரே
கூசற்ற முத்தியில் கூட்டலா நாட்டதுஅது
ஆசற்ற சற்குரு அம்பலம் ஆமே.

3

சித்திகள் எட்டொடும் திண் சிவம் ஆக்கிய
சுத்தியும் எண் சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளில் பயிலுமே.

4

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பால் ஆய்
நல்லார் உள்ளத்து மிக்கு அருள் நல் கலால்
எல்லாரும் உய்யக் கொண்டு இங்கே அளித்த லால்
சொல்லார்ந்த நல்குரு சுத்த சிவமே.

5

தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உனக் கண்டு உரையாலே
மூவாப்பசு பாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்பு உற்றே.

6

சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து
அத்தனை நல்கு அருள் காணா அதி மூடர்
பொய்த் தகு கண்ணான் நமர் என்பர் புண்ணியர்
அத்தன் இவன் என்று அடி பணிவாரே.

7

உண்மையில் பொய்மை ஒழித்தலும் உண்மைப் பார்
திண்மையும் ஒண்மைச் சிவம் ஆய அவ் அரன்
வண்மையும் எட்டு எட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே.

8

சிவனே சிவ ஞானி ஆதலால் சுத்த
சிவனே என அடி சேர வல்லார்க்கு
நவம் ஆன தத்துவம் நல் முத்தி நண்ணும்
பவம் ஆனது இன்றிப் பரலோகம் ஆமே.

9

குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனும் ஆய்க் கோனும் ஆய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே.

10

சித்தம் யாவையும் சிந்தித்து இருந்திடும்
அத்தன் உணர்த்துவது ஆகும் அருளாலே
சித்தம் யாவையும் திண் சிவம் ஆனக்கால்
அத்தனும் அவ் இடத்தே அமர்ந்தானே

11

தான் நந்தி சீர்மை உள் சந்தித்த சீர் வைத்த
கோன் நந்தி எந்தை குறிப்பு அறிவார் இல்லை
வான் நந்தி என்று மகிழும் ஒருவற்குத்
தான் நந்தி அங்கித் தனிச் சுடர் ஆமே.

12

திரு ஆய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளாது அருளும் மயக்கு அறும் வாய்மைப்
பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன்
உருவாய் அருளா விடில் ஓர ஒண்ணாதே

13

பத்தியும் ஞான வைராக்கியமும் பர
சித்திக்கு வித்து ஆம் சிவோகமே சேர்தலான்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
சத்தி அருள் தரில் தான் எளிது ஆமே.

14

இன் எய்த வைத்தது ஓர் இன்பப் பிறப்பினை
முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை
தன் எய்தும் காலத்துத் தானே வெளிப்படும்
மன் எய்த வைத்த மனம் அது தானே.

15

சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் சித்தி
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் முத்தி
சிவம் ஆன ஞானம் சிவ பரத்தே ஏகச்
சிவம் ஆன ஞானம் சிவ ஆனந்தம் நல்குமே.

16

அறிந்து உணர்ந்தேன் இவ் அகல் இடம் முற்றும்
செறிந்து உணர்ந்து ஓதித் திரு அருள் பெற்றேன்
மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை
பிறிந்து ஒழிந்தேன் இப் பிறவியை நானே.