பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கூடிய பாதம் இரண்டும் படி மிசை பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழுந்து தேடுமுகம் ஐந்து செங் கணின் மூ ஐந்து நாடும் சதா சிவ நல் ஒளி முத்தே.
வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன் மீது ஆன ஐம் முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும் சாதாரணம் ஆம் சதா சிவம் தானே.
ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின் ஆகின்ற சத்தி உள் அத்திசை பத்தே.
அத்திசைக்கு உள்ளே அமர்ந்தன ஆறு அங்கம் அத்திசைக்கு உள்ளே அமர்ந்தன நால்வேதம் அத்திசைக்கு உள்ளே அமர்ந்த சரியையோடு அத்திசைக்கு உள்ளே அமர்ந்த சமயமே.
சமயத்து எழுந்த அவத்தை ஈர் ஐந்து உள சமயத்து எழுந்த இராசி ஈர் ஆறு உள சமயத்து எழுந்த சதி ஈர் ஆறு எட்டு உள சமயத்து எழுந்த சதா சிவம் தானே.
நடுவு கிழக்குத் தெற்குத் தர மேற்கு நடுவு படிக நல் குங்கும வன்னம் அடைவு உள அஞ்சனம் செவ்வரத் தம்பால் அடியேற்கு அருளிய முகம் இவை அஞ்சே.
அஞ்சு முகம் உள ஐம் மூன்று கண் உள அஞ்சினோடு அஞ்சு கரதலம் தான் உள அஞ்சுடன் அஞ்சு ஆயுதம் உள நம்பி என் நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே.
சத்தி தராதலம் அண்டம் சதா சிவம் சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம் சத்தி உருவம் அருவம் சதாசிவம் சத்தி சிவ தத்துவம் முப்பத்து ஆறே.
தத்துவம் ஆவது அருவம் சராசரம் தத்துவம் ஆவது உருவம் சுகோதயம் தத்துவம் எல்லாம் சகலமும் ஆய் நிற்கும் தத்துவம் ஆகும் சதா சிவன் தானே.
கூறுமின் ஊறு சதா சிவன் எம் இறை வேறு ஓர் உரை செய்து மிகைப் பொருளாய் நிற்கும் ஏறு உரை செய் தொழில் வானவர் தம்மொடு மாறு செய்வான் என் மனம் புகுந்தானே.
இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும் சுருள் ஆர்ந்த செஞ் சடைச் சோதிப் பிறையும் அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதிப் பிரானைத் தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே.
சத்தி தான் நிற்கின்ற ஐம் முகம் சாற்றிடில் உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும் தத்துவம் பூருவம் தற்புருடன் சிரம் அத் தகு கோரம் மகுடத்து ஈசனே.
நாணு நல் ஈசான நடுஉச்சி தான் ஆகும் தாணுவின் தன் முகந்து தற் புருடம் ஆகும் காணும் அகோரம் இருதயம் குய்யமாம் மாண் உற வாமம் ஆம் சத்தி நல் பாதமே.
நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண் ஆம் வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சை ஆம் செஞ்சு உறு செஞ் சுடர் சேகரி மின் ஆகும் செஞ் சுடர் போலும் தெசாயுதம் தானே.
எண் இல் இதயம் இறை ஞான சத்தி ஆம் விண்ணில் பரை சிரமிக்க சிகை ஆதி வண்ணக் கவசம் வனப்பு உடை இச்சை ஆம் பண்ணும் கிரியை பர நேத்திரத்திலே.
சத்தி நால் கோணம் சலம் உற்று நின்றிடும் சத்தி அறு கோணம் சயனத்தை உற்றிடும் சத்தி நல் வட்டம் சலம் உற்று இருந்திடும் சத்தி உரு ஆம் சதா சிவன் தானே
மா நந்தி எத்தனை காலம் அழைக்கினும் தா நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும் கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின் மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே.
ஒன்றிய வாறும் உடலின் உடன் கிடந்து என்றும் எம் ஈசன் நடக்கும் இயல்பு அது தென் தலைக்கு ஏறத் திருந்தும் சிவன் அடி நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே.
உணர்ந்தேன் உலகினில் ஒண் பொருளானைக் கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம் புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே.
ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிடத் தாங்கிடும் ஈர் ஏழு தான் நடு ஆனதில் ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம் என ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே.
தன் மேனி தன் சிவலிங்கம் ஆய் நின்றிடும் தன் மேனி தானும் சதா சிவம் ஆய் நிற்கும் தன் மேனி தன் சிவன் தன் சிவ ஆனந்தம் ஆம் தன் மேனி தான் ஆகும் தற்பரம் தானே.
ஆரும் அறியார் அகாரம் அவன் என்று பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி தாரம் இரண்டும் தரணி முழுதும் ஆய் மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே.
இலிங்க நல் பீடம் இசையும் ஓங் காரம் இலிங்க நல் கண்ட நிறையும் மகாரம் இலிங்கத்து உள் வட்ட நிறையும் உகாரம் இலிங்க மகார நிறை விந்து நாதமே.