ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின்
தாளின் ஏவல் தலையின் இயற்றி
வழிவழி வந்த மரபினம் மொழிவதுன்
ஐந்தெழுத்தவையெம் சிந்தையிற் கிடத்தி
5 நனவே போல நாடொறும் பழகிக்
கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக்
கேட்பதும் நின்பெருங் கீர்த்தி மீட்பது
நின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த
மதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென
10
அருத்திசெய்திடுவ துருத்திர சாதனம்
காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன்
ஆலயம் வலம்வரு தற்கே சால்பினில்
கைகொடு குயிற்றுவ தைய நின்னது
கோயில் பல்பணி குறித்தே ஒயாது
15
உருகி நின்னினைந் தருவி சோரக்
கண்ணிற் காண்பதெவ் வுலகினும் காண்பனவெல்லாம்
நீயே யாகி நின்றதோர் நிலையே நாயேன்
தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால்
அலைகடல் பிறழினும் அடாதே அதனால்
20
பொய்த்தவவேடர் கைத்தகப் படுத்தற்கு
வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச்
சமயப் படுகுழி சமைத்தாங் கமைவயின்
மானுட மாக்களை வலியப் புகுத்தும்
ஆனா விரதத் தகப்படுத் தாழ்த்தும்
25
வளைவுணர் வெனக்கு வருமோ உளர்தரு
நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும்
வரையில் சீகர வாரியும் குரைகுடல்
பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி
எண்ணில வாகி இருங்கடல் அடங்கும்
30
தன்மைபோலச் சராசரம் அனைத்தும்
நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ
ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்
வானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய்
நான்மறை யாளர் நடுவுபுக் கடங்கிச்
35
செம்பொன் தில்லை மூதூர்
அம்பலத் தாடும் உம்பர்நா யகனே.