பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / அவத்தை பேதம் கீழாலவத்தை
வ.எண் பாடல்
1

ஐ ஐந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கை கண்ட பல் நான்கில் கண்டு அங் கனா என்பர்
பொய் கண்டு இலாத புருடன் இதயம் சுழுனை
மெய் கண்டவன் உந்தி ஆகும் துரியமே.

2

முப்பதோடு ஆறின் முதல் நனா ஐந்து ஆகச்
செப் பதின் நான்காய்த் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி
அப் பதி ஆகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம் ஈறு ஆய்த் தேர்ந்து கொள்ளீரே.

3

இந்தியம் ஈர் ஐந்து ஈர் ஐந்து மாத்திரை
மந்திரம் ஆய் நின்ற மாருதம் ஈர் ஐந்தும்
அந்தக் கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும்
பந்த அச் சக்கரப் பால் அது ஆகுமே.

4

பார் அது பொன்மை பசுமை உடையது
நீர் அது வெண்மை செம்மை நெருப்பு அது
கார் அது மாருதம் கருப்பை உடையது
வானகம் தூமம் மறைந்து நின்றாரே.

5

பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்து உளும்
ஏதம் படம் செய்து இருந்த புறநிலை
ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு
ஆதி அவத்தைக் கருவி தொண்ணூற்று ஆறே.

6

இட வகை சொல்லில் இருபத்து அஞ்சு ஆனை
படு பர சேனையும் பாய் பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள் உறு நால்வர்
அடைய நெடும் கடை ஐந்தொடு நான்கே.

7

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பு இடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிர் இடை நட்பு அறியாதார்
மடம் புகு நாய் போல் மயங்கு கின்றாரே.

8

இருக்கின்ற வாறு ஒன்று அறிகிலர் ஏழைகள்
முருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகம் தேர்ந்து
உருக் கொண்டு தொக்க உடல் ஒழியாதே.

9

ஒளித்திட்டு இருக்கும் ஒருபதினாலை
அளித்தனன் என் உள்ளே ஆறியன் வந்து
அளிக்கும் கலைகளின் அறுபத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.

10

மண்ணினில் ஒன்று மலர் நீரும் அங்காகும்
பொன்னினில் அங்கி புகழ் வளி ஆகாயம்
மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய்
உன்னின் முடிந்த ஒரு பூத சயமே.

11

முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர் முனாள் இல்லை
கன்னியைக் கன்னியே காதலித்தாளே.

12

கண்ட கனவு ஐந்தும் கலந்தன தான் ஐந்தும் சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டை அது ஆகிப் பரந்த வியாக்கிரத்து
அண்டமும் தான் ஆய் அமர்ந்து நின்றானே

13

நின்றவன் நிற்கப் பதினாலில் பத்து நீத்து
ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனை வாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவு அதே.

14

தானம் இழந்து தனி புக்கு இதயத்து
மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி
ஆன விரிவு அறியா அவ் வியத்தத்தின்
மேனி அழிந்து சுழுத்தியது ஆமே.

15

சுழுனையைச் சேர்ந்து உள மூன்று உடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன் தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே இருந்து
விழுமப் பொருளுடன் மேவி நின்றானே.

16

தானத்து எழுந்து தருக்கும் துரியத்தின்
வானத்து எழுந்து போய் வையம் பிறகிட்டுக்
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தை விட்டு ஊமனின் நின்றானே.

17

ஊமை எழுத்தொடு பேசும் எழுத்து உறில்
ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓமயம் உற்றது உள் ஒளி பெற்றது
நாமயம் அற்றது நாம் அறியோமே.

18

துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலும் நஞ்சு உண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரியம் இறந்த இடம் சொல்ல ஒண்ணாதே.

19

மாறா மலம் ஐந்தான் மன்னும் அவத்தையின்
வேறு ஆய மாயா அநு கரண ஆதிக்கு இங்கு
ஈறு ஆகாதே எவ் உயிரும் பிறந்து இறுந்து
ஆறாத வல் வினையால் அடி உண்ணுமே.

20

உண்ணும் தன் ஊடு ஆடாது ஊட்டிடும் மாயையும்
அண்ணல் அருள் பெற்ற முத்தி அது ஆவது
நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து
எண்ணூறு ஞானத்தின் நேர் முத்தி எய்துமே.

21

அதி மூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அரும் கன்மம் உன்னித்
திதம் ஆன கேவலம் இத் திறம் சென்று
பரம் ஆகா வைய அவத்தைப் படுவானே.

22

ஆசான் முன்னே துயில் மாணவர்தமைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல் போல்
நேசாய ஈசனு நீடு ஆணவத் தரை
ஏசாத மாயாள் தன்னாலே எழுப்புமே.

23

மஞ்சொடு மந்தாகினி குடம் ஆம் என
விஞ்சு அறி வில்லோன் விளம்பு மிகுமதி
எஞ்சலில் ஒன்று எனும் ஆறு என இவ் உடல்
அஞ்சு உணு மன்னன் அன்றே போம் அளவே.

24

படி உடை மன்னவன் பாய் பரி ஏறி
வடி உடை மாநகர் தான் வரும் போது
அடி உடை ஐவரும் அங்கு உறை வோரும்
துடி இல்லம் பற்றித் துயின்றனர் தாமே.

25

நேரா மலத்தை நீடு அடைந்து அவத்தையின்
நேரான வாறு உன்னி நீடு நனவினில்
நேரா மலம் ஐந்தும் நேரே தரிசித்து
நேர் ஆம் பரத்துடன் நிற்பது நித்தமே.