பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அஞ்சும் கடந்த அனாதி பரம் தெய்வ நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி விஞ்சும் உடல் உயிர் வேறு படுத்திட வஞ்சத்து இருந்த வகை அறிந்தேனே.
சத்தி பரா பரம் சாந்தி தனில் ஆன சத்தி பரானந்தம் தன்னில் சுடர் விந்து சத்திய மாயை தனுச் சத்தி ஐந்துடன் சத்தி பெறும் உயிர் தான் அங்கத்து ஆறுமே.
ஆறு ஆறுக்கு அப்பால் அறிவார் அறிபவர் ஆறு ஆறுக்கு அப்பால் அருளார் பெறுபவர் ஆறு ஆறுக்கு அப்பால் அறிவு ஆம் அவர்கட்கே ஆறு ஆறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே.
அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்குப் பஞ்சணி காலத்துப் பள்ளி துயில் நின்ற விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு நஞ்சு உற நாதி நயம் செய்யும் ஆறே.
உரிய நனாத் துரியத்தில் இவன் ஆம் அரிய துரிய நனா ஆதி மூன்றில் பரிய பர துரியத்தில் பரன் ஆம் திரிய வரும் துரியத்தில் சிவமே.
பரம் ஆம் அதீதமே பற்று அறப் பற்றப் பரம் ஆம் அதீதம் பயிலப் பயிலப் பரம் ஆம் அதீதம் பயிலாத் தபோதனர் பரம் ஆகார் பாசமும் பற்று ஒன்று அறாதே.
ஆயும் பொய்ம் மாயை அகம்புறம் ஆய் நிற்கும் வாயும் மனமும் கடந்த மயக்கு அறின் தூய அறிவு சிவானந்தம் ஆகிப் போய் வேயும் பொருளாய் விளைந்தது தானே.
துரியப் பரியில் இருந்த அச்சீவனைப் பெரிய வியாக்கிரத்து உள்ளே புகவிட்டு நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு உரிய வினைகள் நின்று ஓலம் இட்டு அன்றே.
நின்ற இச் சாக்கிர நீள் துரியத்தினின் மன்றனும் அங்கே மணம் செய்ய நின்றிடும் மன்றன் மணம் செய்ய மாயை மறைந்திடும் அன்றே இவனும் அவன் வடிவு ஆமே.
விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய் இருந்த இடத்து இடை ஈடு ஆன மாயை பொருந்தும் துரியம் புரியில் தான் ஆகும் தெரிந்த துரியத்தே தீது அகலாதே.
உன்னை அறியாது உடலை முன் நான் என்றாய் உன்னை அறிந்து துரியத்து உற நின்றாய் தன்னை அறிந்தும் பிறவி தணவாது ஆல் அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே.
கரு வரம்பு ஆகிய காயம் துரியம் இருவரும் கண்டீர் பிறப்பு இறப்பு உற்றார் குருவரம் பெற்றவர் கூடிய பின்னை இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே.
அணுவின் துரியத்தில் ஆன நனவும் அணு அசைவின் கண் ஆன கனவும் அணு அசைவில் பரா தீதம் சுழுத்தி பணியில் பரதுரியம் பரம் ஆமே.
பர துரியத்து நனவும் பரந்து விரி சகம் உண்ட கனவு மெய்ச் சாந்தி உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவத் தெரியும் சிவ துரி அத்தனும் ஆமே.
பரமா நனவின் பின் பாற்சகம் உண்ட திரமார் கனவும் சிறந்த சுழுத்தி உரம் ஆம் உப சாந்தம் உற்றல் துறவே தரனாம் சிவ துரி அத்தனும் ஆமே.
சீவன் துரிய முதல் ஆகச் சீர் ஆன ஆவ சிவன் துரி யாந்தம் அவத்தை பத்து ஓவும் பரா நந்தி உண்மைக்குள் வைகியே மேவிய நால் ஏழ் விடுத்து நின்றானே.
பரம் சிவன் மேல் ஆம் பரமம் பரத்தில் பரம் பரன் மேல் ஆம் பர நனவு ஆக விரிந்த கனா இடர் வீட்டும் சுழுனை உரம்தகு மா நந்தி ஆம் உண்மை தானே.
சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம் மேல் ஆய விந்து சதா சிவம் மிக்கு ஓங்கிப் பால் ஆய்ப் பிரமன் அரி அமராபதி தேவாம் உருத்திரன் ஈசன் ஆம் காணிலே.
கலப்பு அறியார் கடல் சூழ் உலகு ஏழும் உலப்பு அறியார் உடலோடு உயிர் தன்னை அலப்பு அறிந்து இங்கு அர சாள கிலாதார் குறிப்பது கோல மடல் அது வாமே.
பின்னை அறியும் பெரும் தவத்து உண்மைசெய் தன்னை அறியில் தயாபரன் எம் இறை முன்னை அறிவு முடிகின்ற காலமும் என்னை அறியல் உற்று இன்புற்ற வாறே.
பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன் அணி பூடணம் தன்னை மறைத்தது தன் கணரணங்கள் ஆம் தன்னின் மறைந்தது தன் கரணங்களே.
மரத்தை மறைத்தது மா மத யானை மரத்தில் மறைந்தது மா மத யானை பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே.
ஆறு ஆறு அகன்று நமவிட்டு அறிவாகி வேறு ஆன தானே அகரமாய் மிக்கு ஓங்கி ஈறார் பரையின் இருள் அற்ற தற்பரன் பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.
துரியத்தில் ஓர் ஐந்தும் சொல் அகராதி விரியப் பரையின் மிகுநாதம் அந்தம் புரியப் பரையின் பரா வத்தார் போதம் திரியப் பரமம் துரியம் தெரியவே.
ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப் பந்திடும் சுத்த அவத்தைப் பதைப் பினில் நந்தி பராவத்தை நாடச் சுடர் முனம் அந்தி இருள் போலும் ஐம் மலம் ஆறுமே.
ஐ ஐந்தும் எட்டுப் பகுதியும் மாயையும் பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு எய்யும் படியாய் எவற்றும் ஆய் அன்று ஆகி உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே.
நின்றான் அருளும் பரமும் முன் நேயமும் ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும் சென்றான் எனை விடுத்து ஆங்கில் செல்லாமையும் நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.