பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / வாய்மை
வ.எண் பாடல்
1

அற்றது உரைக்கில் அருள் உபதேசங்கள்
குற்றம் அறுத்த பொன்போலும் கனல் இடை
அற்று அற வைத்து இறை மாற்று அற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழும் சுடர் ஆகுமே.

2

எல்லாம் அறியும் அறிவு தனை விட்டு
எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கு இல்லை
எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில்
எல்லாம் அறிந்த இறை எனல் ஆமே.

3

தானே உலகில் தலைவன் எனத் தகும்
தானே உலகுக்கு ஓர் தத்துவம் ஆய் நிற்கும்
வானே மழை பொழி மா மறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம் ஒன்று ஆமே.

4

அருள் பெற்ற காரணம் என் கொல் அமரில்
இருள் அற்ற சிந்தை இறைவனை நாடி
மருள் உற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருள் உற்ற சேவடி போற்றுவர் தாமே.

5

மெய் கலந்தாரொடு மெய் கலந்தான் தன்னைப்
பொய் கலந்தார் முன் புகுதா ஒருவனை
உய் கலந்து ஊழித் தலைவனும் ஆய் நிற்கும்
மெய் கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.

6

மெய் கலந்தாரொடு மெய் கலந்தான் மிகப்
பொய் கலந்தார் உள் புகுதா புனிதனைக்
கை கலந்து ஆவி எழும் பொழுது அண்ணலைக்
கை கலந்தார்க்கே கருத்து உறல் ஆமே.

7

எய்திய காலத்து இரு பொழுதும் சிவன்
மெய் செயின் மேலை விதி அதுவாய் நிற்கும்
பொய்யும் புலனும் புகல் ஒன்று நீத்திடில்
ஐயனும் அவ்வழி ஆகி நின்றானே.

8

எய்துவது எய்தாது ஒரு இது அருள்
உய்ய அருள் செய்தான் உத்தமன் சீர் நந்தி
பொய் செய்புலன் நெறி ஒன்பதும் ஆட் கொளின்
மெய் என் புரவியை மேற் கொள்ளல் ஆமே.

9

கை கலந்தானைக் கருத்தினுள் நந்தியை
மெய் கலந்தான் தன்னை வேத முதல்வனை
பொய் கலந்தார் முன் புகுதாப் புனிதனைப்
பொய் ஒழிந்தார்க்கே புகல் இடம் ஆமே.

10

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாரும் திறந்து அறிவார் இல்லை
பொய்த்தாள் இடும்பையைப் பொய் அற நீ விட்டு அங்கு
அத்தாள் திறக்கில் அரும் பேறு அது ஆமே.

11

உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்
மெய்யன் அரன் நெறி மேல் உண்டு திண் எனப்
பொய் ஒன்றும் இன்றிப் புறம் பொலிவார் நடு
ஐயனும் அங்கே அமர்ந்து நின்றானே.

12

வம்பு பழுத்த மலர்ப் பழம் ஒன்று உண்டு
தம்பால் பறவை புகுந்து உணத்தான் ஒட்டாது
அம்பு கொண்டு எய்திட்ட கலத் துரத்திடில்
செம் பொன் சிவகதி சென்று எய்தலாமே.

13

மயக்கிய ஐம் புலப் பாசம் அறுத்துத்
துயக்கு அறுத்தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
தியக்கம் செய்யாதே சிவன் எம் பெருமான்
உயப்போ என மனம் ஒன்று வித்தானே.

14

மனம் அது தானே நினைய வல்லார்க்குக்
இனம் எனக் கூறும் இரும் காயம் ஏவல்
தனிவு இனி நாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயல் ஆகும் போது அப் புவிக்கே.